preload preload preload preload

Tuesday, September 2, 2008

எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதைகள் 02

மூன்று குடும்பக் கதைகள்
1பீங்கான் நாரைகள்

தனது பதினேழாவது வயதில் அம்மா ஒரு நாள் சமையல் செய்து கொண்டிருந்த போது அப்பா பர்மாவிலிருந்து கொண்டுவந்திருந்த தேநீர் கோப்பையை கைதவறி உடையவிட்டதில் இருந்துதான் இப்படி தரையை வெறித்து பார்த்தபடியிருக்கிறாள் என்கிறார்கள். அப்போது நாங்கள் பிறக்கவேயில்லை. அந்த தேநீர் கோப்பை சீனா களிமண்ணில் தயாரிக்கபட்டது அதில் இரண்டு நாரைகளின் உருவம் தங்கநிற சித்திரமாக தீட்டப்பட்டிருந்தாக அப்பா சில முறை சொல்லியிருக்கிறார். அநேகமாக திருமணமான புதிதில் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அப்பா அந்த தேநீர் கோப்பையை வாங்கி கொண்டு வந்திருக்க கூடும். சம்பவம் நடந்த அன்று அம்மா சூடான தேநீரை கோப்பை நிறைய ஊற்றியதால் கையில் எடுக்க முடியாமல் தவறி கிழே போட்டிருக்கிறாள். அப்பா உடைந்து கிடந்த தேநீர் கோப்பையை கண்டதும் அவள் கன்னத்தோடு ஒங்கி ஒரு அறை கொடுத்துவிட்டு உருப்படாத கழுதை.. பர்மா கப்புடி.. ஒரு நிமிசத்திலே உடைச்சிட்டே..அடக்க ஒடுக்கமா இல்லாம திம்மானி மாதிரி நடந்தா இப்படி தான் ஆகும் என்று வாய்க்கு வந்தபடி திட்டியிருக்கிறார். அம்மாவிடம் சலனமேயில்லை. திருமணத்திற்கு முன்பு வரை அப்பா பர்மாவில் மரவணிகம் செய்து கொண்டிருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் பர்மாவிற்கு போகவில்லை. நன்மைதருவார் கோவில் சந்தில் சிறியதாக ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து கொண்டு இங்கேயே வாழத் துவங்கிவிட்டார். அம்மாவை அவர் எடுத்திருந்த ஒன்றிரண்டு புகைப்படங்களில் கூட அவள் தரையை வெறித்தபடிதானிருக்கிறாள். அப்பாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக ஒரு போதும் தோன்றவேயில்லை. அப்பா மட்டுமில்லை. வீட்டில் இருந்த சித்தப்பாக்களோ ஆச்சியோ யாருமே அதை ஒரு பொருட்டாக நினைக்கவேயில்லை. எப்போதாவது வேற்று ஆட்கள் யாராவது வீட்டிற்கு வரும்போது தான் அம்மா தலையை குனிந்து கொண்டேயிருக்கிறாள் என்ற விஷயம் கவனத்திற்கு வரும். அப்பா அது ஒரு வியாதி என்று சொல்லி சமாளித்துவிடுவார். அம்மா தரையை வெறித்தபடி என்ன தான் பார்த்து கொண்டிருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவளது பார்வை பூமியில் ஏதோ முக்கியமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருப்பது போல அத்தனை கூர்மையாகயிருக்கும். இரவிலும் கூட அம்மா சமையற்கட்டின் உள்ளே வெறும்தரையில் முகத்தை பூமியை நோக்கி பார்த்தபடி தான் படுத்திருப்பாள். அம்மாவின் குடும்ப வாழ்க்கையில் இதனால் பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. ஆறு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அதில் ஒன்று பிறந்த சில வாரங்களிலே இறந்தும் போயிருக்கிறது. அவள் குழந்தைகளை கூட தலையை நிமிர்ந்து பார்த்ததேயில்லை. அம்மா குனிந்தேயிருந்து இருந்து அவளது கழுத்தே அறுபட்ட வாழைமட்டை தொங்குவது போல கீழ் நோக்கி தொங்கி கொண்டிருக்க துவங்கியது. அம்மா சமையல் அறைக்குள்ளாகவே தனது வாழ்க்கையை கழித்தாள். எப்போதாவது கைதவறி ஒரு டம்ளரோ கரண்டியோ விழுந்தவுடன் அவள் மிகுந்த ஆவேசத்துடன் பூமியை திட்டிக் கொண்டிருப்பதை காணும் போது தெரிந்த யாரோ ஒரு ஆளோடு பேசிக் கொண்டிருப்பது போலவேயிருக்கும். வீட்டில் பகலும் இரவும் அப்பாவின் குரல் எதையாவது சாப்பிடவோ குடிக்கவோ யாசித்து கொண்டேயிருந்தது. அபூர்வமாக வீட்டில் யாரும் இல்லாத நாட்களில் கூட அம்மா வெளியே போனதேயில்லை. அவளுக்கு உலகம் நேர்கொண்டு பார்க்க விருப்பமற்றதாக பதிந்துவிட்டது. சில நேரம் அம்மாவை போல நானும் தலையை குனிந்தபடியே நின்று பார்ப்பேன். ஏதோ ஒரு குற்றமனப்பாங்கு மனதில் கசிய துவங்கி மெல்ல அழுத்த துவங்கிவிடும். ஒரு சாதாரண பீங்கான் கோப்பையை உடைத்தற்காக எதற்காக இப்படியொரு தண்டனையை கொடுத்து கொண்டிருக்கிறாள் என்று யோசித்து கொண்டேயிருப்பேன். என்னால் அவளது இயல்பை புரிந்து கொள்ளவே முடியாது. காலம் வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்ற துவங்கியது. திருமணமும் வேலையும் வீட்டினுள் வளைய வந்த எங்கள் அக்காகளையும் என்னையும் வேறுவேறு ஊர்களுக்கு இடம் மாற்றியது. சாவு ஒரு விருந்தாளியை போல வீட்டில் நுழைந்து அதன் விருப்பமான மனிதர்களை கவ்விக் கொண்டு சென்றது. ஆச்சி இறந்த போதோ, சித்தப்பாவின் மரணத்திலோ அம்மாவிடம் சிறிய மாற்றம் கூட ஏற்படவேயில்லை. அப்போதும் அம்மா தலை குனிந்து கொண்டேதானிருந்தாள். வயோதிகம் முற்றி அம்மாவும் அப்பாவும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள். அப்போதும் கூட அம்மாவின் சமையல் வேலை ஒயவேயில்லை. அவள் கரப்பான் பூச்சிகளோடும், ஈரத்தில் நமத்து போன தீக்குச்சிகளோடும் பேசிக்கொண்டிருப்பதை அப்பா கேட்டிருக்கிறார். அவருக்கு சில சமயம் அம்மாவை பார்க்க பயமாகயிருக்கும். தனக்கும் வயதாகிவிட்டது என்று அவளுக்கு தெரிந்திருக்குமா, எதற்காக இத்தனை வைராக்கியமாக இருக்கிறாள் என்று அவளை பார்த்தபடியே யோசித்து கொண்டிருப்பார். அவள் முறிந்த தானியக்கதிர் போல தலைகவிழ்ந்து கொண்டிருப்பாள். அம்மா யாரையும் குற்றம் சொன்னதோ திட்டியதோயில்லை. கோடைகாலத்தின் பின்பாதியில் ஒரு நாளிரவு எங்கள் அப்பா குளியல் அறைக்குள் விளக்கு போடாமல் நடந்து போய் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அன்றைக்கு கூட அம்மா வீட்டில் சமைப்பதை நிறுத்தவேயில்லை. அப்பா இறந்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது கூட அவள் அதே சமையல்கட்டின் உள்ளே தரையை பார்த்து குனிந்தபடியே அழுது கொண்டிருந்தாள். அவரது உடலை எடுத்து கொண்டு வெளியே போகும் நிமிசத்தில் அவள் விடுவிடுவென முன்வாசலுக்கு வந்து அந்த உடலின் முன்பாக வந்து நின்றவளாக முதன்முறையாக தலையை நிமிர்த்தி பார்த்து நான் வேணும்னு பீங்கான் கோப்பையை உடைக்கலைங்க .. என்று சொல்லிவிட்டு தலையை திரும்பவும் கவிழ்த்திக் கொண்டாள். அப்பாவிடமிருந்து இப்போது எந்த எதிர்ப்பும் வரவேயில்லை. அம்மா பெருமூச்சிட்டு கொண்டபடி தனது அழுகையை சேலையால் துடைத்தபடியே துஷ்டி கேட்டு வந்தவர்களுக்கு கடுங்காப்பி போடுவதற்காக அடுப்பை பற்ற வைக்க துவங்கினாள். அப்பாவின் உடல் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் போய் கொண்டிருந்தது. அன்றோடு தனக்கு திருமணமாகி நாற்பத்தி ரெண்டு வருடங்கள் முடிந்து நான்கு மாதங்கள் ஏழு நாட்கள் ஆகியிருந்தது அம்மாவிற்கு நன்றாகவே நினைவிலிருந்தது.

2 ஙப் போல் வளை.

அம்மாவிடம் மதிய சாப்பாட்டின் போதே தாத்தாவை தானே கொல்லப்போவதாக அப்பா சொல்லி கொண்டிருந்தார். நானும் சின்ன அக்காவும் அதை கேட்டுக் கொண்டிருந்தோம். அம்மா மறுப்போ ஆதரவோ எதுவுமே சொல்லவில்லை. சாப்பாட்டை மென்றபடியே அப்பா கடுகடுத்த குரலில் அந்த ஆளு கடைக்கு வர்றவரைக்கும் நான் ஒரு மசிரு கூட சம்பாதிக்க முடியாது. கல்லாவிலே கிடக்கிற சில்லறையை கூட கணக்கு பாத்து வச்சிட்டு போறான். இப்படியே என்னாலே பாத்துட்டு இருக்க முடியாது சௌந்திரம். பெத்தவன்னா.. அவன் இம்சையை எத்தனை நாள் சகிச்சிகிட்டு இருக்கிறது. இன்னைக்கு ராத்திரி அவன் கழுத்தை நெறிச்சி கொல்லப்போறேன். வெளியே யாருக்கும் தெரியாம மறைச்சிட்டு நாளையில இருந்து நான் கடைக்கு போயிருவேன். என்று சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக உள்ளே எடுத்துக் கொண்டு போனபோது கடையிலிருந்து தாத்தா சைக்கிளில் வந்து இறங்கி ஒரமாக மரநிழலில் நிறுத்தி பூட்டிக் கொண்டிருந்தார். அப்பா அவரை பார்க்காதது போல வெளியே போக முயன்ற போது எதுக்குடா வெயிலில் கிளம்பி போறே.. கடையை பூட்டிட்டு வந்துட்டேன். என்று தாத்தா சொன்னதை அப்பா கேட்கவேயில்லை. அம்மா எப்போதும் போலவே அன்றும் மாலையில் உதிரி மல்லிகை பூ வாங்கி கட்டி தலையில் வைத்து கொண்டு அடுத்த வீட்டு பெண்ணோடு ஏதோ ஊர்கதை பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்பா கடையை எடுத்துவிட்டு வரும் பத்தரை மணி வரைக்கும் காத்து கொண்டிருந்தாள். அப்பாவும் தாத்தாவும் ஒரே சைக்கிளில் தான் வீடு திரும்பினார்கள். அப்பா குளித்துவிட்டு சாப்பிட வருவதற்குள் தாத்தா சாப்பிட்டு முடித்துவிட்டு தனது முழங்கால் வலி மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டார். அப்பாவும் அம்மாவும் உறக்கம் வராமல் பாயில் படுத்து கிடந்தார்கள். வெளியே யார் வீட்டிலே ரேடியோ பாடிக் கொண்டிருந்தது எங்கள் காதில் விழுந்தது. அப்பா ரகசியமான குரலில் அந்த ஜன்னலை எழுந்து போய் சாத்திட்டு வா.. என்று சொன்னார். அம்மா மெதுவாக எழுந்து போய் ஒவ்வொரு ஜன்னலாக சாத்திவிட்டு வந்து படுத்து கொண்டாள். அப்பா ஒரத்தில் எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கை ஊதி அணைத்ததும் வீடு முழுவதும் இருள் பீச்சியடிக்க துவங்கியது. அப்பா மெதுவாக இருட்டிற்குள் நடந்து போய்க் கொண்டிருந்தார். அம்மா அதை கவனிக்காதது போல சுருண்டு படுத்து கொண்டாள். அப்பா கையில் உமி தலையணையை இருந்தது. அப்பா நடந்து சென்றபோது வழியில் கிடந்த தாத்தாவின் வெற்றிலை உரலை மிதித்திருக்க கூடும் அது பலத்த சப்தத்துடன் உருண்டு ஒடியது. அப்பா கையில் தலையணையோடு இருளில் நின்று கொண்டிருந்தார். தாத்தா தனது படுக்கையின் அடியில் இருந்து தீப்பெட்டி ஒன்றை எடுத்து உரசி காட்டினார். அந்த வெளிச்சத்தில் இறுக்கமும் ரௌத்திரமும் நிரம்பிய அப்பாவின் முகம் தெரிந்து மறைந்தது. தாத்தா தொண்டையை செருமிக்கொண்டவராக குடிக்க தண்ணி கொண்டாடா என்று சொன்னார். அப்பா தலையணையை கிழே போட்டுவிட்டு இருட்டிற்குள்ளாகவே நடந்து போய் குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தந்தார். இதற்குள் தாத்தா பூட்டியிருந்த ஜன்னல்களை திறந்துவிட்டு வானில் தெறியும் ஒன்றிரண்டு நட்சத்திரங்களை பார்த்தபடியே இருந்தார். பிறகு ஒரு செம்பு தண்ணீரையும் வாங்கி குடித்துவிட்டு வெளிக்கதவை திறந்து மூத்திரம் போய்விட்டு வந்து படுத்து கொண்டார். மறுநாள் காலை தாத்தா கடைக்கு போகவேயில்லை. சில வாரங்களில் தாத்தா ரொக்கப்பணம் முழுவதையும் அம்மாவிடமே கொடுத்து வைக்க துவங்கினார். இது நடந்து ஆறு மாதங்களுக்கு பிறகு நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்துருக்கு போய் சாமி கும்பிட்டோம். அதன் பிறகு தாத்தாவின் எழுபத்திரெண்டு வயது வரை அப்பா அவரை மிக அன்போடும் பொறுப்போடும் கவனித்து கொண்டார். தாத்தாவும் தனது மகனும் மருமகளும் போல அன்பானவர்கள் யாருமில்லை என்று பேச்சுக்கு பேச்சு சொல்லிக் கொண்டிருப்பார். அவர்களது அந்நியோன்யம் ஊருக்கே ஒரு வழிகாட்டுதல் போலிருந்தது. எங்கள் குடும்பத்தில் அதன் பிறகு எவருக்குள்ளும் எந்த சச்சரவும் நடக்கவேயில்லை.

3 இல்லறம்.

என்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று தேன்மொழி இந்த மலைநகருக்கு வந்த இரண்டு தினங்களுக்குள் நாலைந்து முறை சொல்லிவிட்டாள். ஆனாலும் அவன் விடாபிடியாக அதையே கேட்டுக் கொண்டிருந்தான். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி நாலைந்து நாட்களே ஆகியிருந்தன. அவன் முதல் இரவில் ஆடைகளே இல்லாமல் பிறந்த மேனியாக உன்னை பார்க்க விரும்புகிறேன் என்று அவளிடம் கேட்டான். அவள் மறுத்து தலையசைத்தபடியே அப்படி என்னால் இருக்க இயலாது. கூச்சமாகயிருக்கிறது என்று சொன்னாள். அவனுக்கு கொஞ்சம் ஆத்திரமாக வந்தது. அவனாகவே அவளது உடைகளை களைந்து எறிய துவங்கினான்.அவளும் முரட்டு தனமாக எதிர்க்க துவங்கினாள். இதனால் கட்டிலில் இருந்து தள்ளியதில் அவன் கிழே விழுந்தான் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் சிரித்து கொண்டிருந்தாள். அவன் அடிபட்ட கையை உதறிக் கொண்டே சொன்னான். நான்உன் புருஷன்டி.. என் கிட்ட எதுக்குடி மறைக்கிறே? அவள் பதில்பேசவில்லை.படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள். அவன் பசியோடு தட்டில் வைத்திருந்த ஆப்பிளை கடித்து குதறி தள்ளினான். பிறகு அவளது விருப்பத்தை பற்றிய கவலையின்றி கையை பிடித்து முறுக்கி அணைத்தபடி அவள் உடல் மீது இயங்க துவங்கினான். அவளிடமிருந்த எதிர்ப்புணர்வு மெதுவாக அடங்கி போனது. மறுநாள் இரவு அவர்கள் ரயிலில் தேனிலவிற்காக பயணமானார்கள். அவன் ரயில் பெட்டிக்குள்ளாகவே அவளோடு உறவு கொள்ள விரும்பியவனை போல எல்லோரும் உறங்கிய பிறகு நீ கழிப்பறைக்கு வந்துவிடு என்றான். அவள் எழுந்து போகவேயில்லை. அவன் அந்த இரவில் மட்டும் பத்துசிகரெட்டிற்கும் மேலாக புகைத்திருக்க கூடும். கடுகடுவெனயிருந்தான். பெர்த்தில் சுருண்டு படுத்திருந்த அவளது இடுப்பில் நகத்தால் ஆழமாக கிள்ளினான். அவள் கத்தவேயில்லை. அவர்கள் மலைநகரின் சரிவில் இருந்த விடுதியில் தங்குவதற்காக அறை எடுத்து கொண்டார்கள். பெட்டிகளை உள்ளே வைத்துவிட்டு ரூம்பாய் வெளியேறிய மறுநிமிசம் அவன் ஆத்திரத்தோடு ராத்திரி பூரா நொந்து போய் கிடந்தேன் தெரியும்லே என்றபடியே மூர்க்கமும் காம வேகமுமாக அவளை படுக்கையில் தள்ளி கூடிவிட்டு அப்படியே உறங்க துவங்கினான். அவள் எழுந்த போது படுக்கையில் மூத்திரவாடை குமட்டிக் கொண்டு வந்தது. அப்படியே உள்ளே போய் குளித்துவிட்டு வரும்போது கவனித்தாள். முழங்கையில் இடித்து கீறல் ஏற்பட்டிருந்தது. வலியில் அழுகை வந்தது. கதவை திறந்து வெளியே போய் நின்று சில நிமிசங்கள் அழுதுவிட்டு உள்ளே வந்து சோபாவில் சுருண்டு படுத்து கொண்டாள். அவன் விழித்து எழுந்தவுடனே பல் துலக்குவதற்குள் அவளை கட்டிக்கொண்டு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சிரித்தான். அவள் பலவீனமாக முகத்துடன் சிரித்தாள். அவன் காலை உணவை முடித்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு புல்தரை நீண்டுள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றான். அவளை புல்தரையில் உட்கார வைத்து நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டான். பிறகு அவள் காதில் இப்படியே புல்தரையில் படுத்துக் கொண்டு உறவு கொண்டால் எப்படியிருக்கும் தெரியுமா? என்று சொல்லி சிரித்தான். அவளுக்கு உடம்பில் நடுக்கம் ஏற்பட துவங்கியது. புல்தரை பக்கம் திரும்பி பார்க்க முடியவேயில்லை. மதியம் அவன் அறைக்கு திரும்பிய பிறகு தனது நண்பன் ஒருவனுக்கு போன் செய்து பீர் குடித்துவிட்டு உறவு கொண்டால் நன்றாகயிருக்குமா என்று ஏதோ ஆலோசனைகள் கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு சாப்பிட்டுவிட்டு அறையின் கதவுகளை மூடி அவளோடு திரும்பவும் கூடினான். மாலை அவர்கள் ஒரு ஆங்கில படத்திற்கு போனார்கள். அங்கும் அவளிடம் உன்னை முழுசாக பார்க்க வேண்டும் என்று சொன்னது நினைவிருக்கிறதா என்று கேட்டான். அவள் பதில் சொல்லவேயில்லை. அன்றிரவு அவன் வெற்றிவீரனை போல அவள் நிர்வாண உடலை வெறித்து பார்த்து கொண்டிருந்த போது அவளுக்கு வந்த அழுகையை அடக்கி கொண்டிருந்தாள் . அவன் சில நிமிசங்கள் அந்த உடம்பை வெறித்து பார்த்து கொண்டிருந்துவிட்டு ஏமாற்றம் அடைந்தவன் போல ஒரு சிகரெட் பற்றவைத்து புகைத்துவிட்டு அவளை படுக்கையில் தள்ளினான். தேனிலவிற்காக ஆறு நாட்கள் அவனோடு மலைநகரில் தங்கியிருந்தாள். அதற்குள் இருபது தடவைக்கும் மேலாக அவர்கள் ஒன்றாக கூடியிருந்தார்கள். மலையை விட்டு கிழே இறங்கி வரும் போது அவள் உடல் வெளிறிப் போய் முகமெல்லாம் அசதி கொண்டது போல இருந்தாள். அவன் பஸ்ஸின் இன்னொரு சீட்டில் இருந்த கல்லுரி மாணவியை வேடிக்கை பார்த்தபடியே வந்தான். அடுத்த சில நாட்களில் அவன் தனது விடுமுறை முடிந்து அலுவலகம் செல்வதற்காக ஆயுத்தம் ஆனான். தேன்மொழியும் அவனோடு புதுக்குடித்தனம் செய்ய புறப்பட்டாள். சந்தோஷமா வச்சிகிடுங்க மாப்பிள்ளை என்று சொல்லி அவனிடம் ஒப்படைத்துவிட்டு தேன்மொழியின் குடும்பமே பிரியாவிடை கொடுத்தது. தேன்மொழியும் மற்ற பெண்களை போல அம்மா வீட்டை விட்டு போகும் துக்கத்தில் அழுது கொண்டிருந்தாள். அதன்பிறகு எல்லா பெண்களை போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக் கொண்டவளை போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக் கொள்ள துவங்கினாள். அவர்களது இனிமையான இல்லற வாழ்க்கை இப்படிதான் துவங்கியது.
_____________________________________________________________________________________

எல்லா நாட்களையும் போல.

ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இவ்வளவிற்கும் பணத்தை செலுத்துவதற்கு துணையாக என்னோடு பழனியப்பனும் வந்திருந்தான். எப்போதும் போலவே வங்கியின் வாசல் வரை ஒன்றாக வந்தோம். அப்போது பழனியப்பனின் செல்போன் அடித்தது. அவன் இரைச்சல் சப்தத்தை விட்டு ஒரமாக நின்று பேச துவங்கினான்.

கையில் பணப்பையை வைத்து கொண்டு நான் எப்போதும் போலவே கண்ணாடி கதவை திறந்து வங்கியின் உள்ளே நுழைந்தேன். வாசலையொட்டி நின்றிருந்த நடுத்தர வயது நபர் கையில் இருந்த சிறிய காகிதம் ஒன்றை பலமாக ஊதியது தெரிந்தது. மறுநிமிசம் என் கண்கள் எரிய துவங்கியது. ஒரு நிமிசம் என்னையும் அறியாமல் கைகளால் இரண்டு கண்களையும் தேய்க்க துவங்கினேன். மிளகாய் பொடி பட்டது போல திகுதிகுவென எரிய துவங்கியது.

கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்க்கும் போது நான் கொண்டு வந்திருந்த லெதர் பை காணமல் போயிருந்தது. என்னால் நம்ப முடியவேயில்லை. என் கையிலிருந்த பணம் ஆறுலட்சத்திநாற்பதினாயிரம் பறிபோய்விட்டிருக்கிறது. என்னால் கத்த முடியவில்லை. கைகள் நடுங்க துவங்கின. சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் போலவே காசாளார் கத்திக் கொண்டிருந்தார். பணம் செலுத்துவதற்காக நாலு பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். ஒரு ஆள் நாலைந்து மஞ்சள் நிற ஸ்லீப்புகளை நிரப்பிக் கொண்டிருந்தார்.

என்னிடமிருந்த பணத்தை பறித்தது யாராகயிருக்கும். அந்த ஆள் இவ்வளவு நேரம் இங்கேயே நின்று கொண்டிருப்பானா என்ன? அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்களில் எரிச்சல் அதிகமாகி நீர்வடிந்து கொண்டிருந்தது. பழனியப்பன் என் தோளில் கைவைத்தபடியே என்ன சார் என்றபோது தான் எனக்கு தன்னிலை உணர துவங்கியது.

பணம் போய்விட்டது. பழனியப்பனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. தொண்டையில் வலி ஏற்பட்டு உடல் நடுங்க துவங்கியது. முகம் வியர்த்து வழிந்திருக்க வேண்டும். பழனியப்பன் என் கையில் பையில்லாததை கண்டுபிடித்தவனை போல என்ன சார் ஆச்சி என்று கத்தினான். யாரோ பணத்தை திருடிட்டாங்க என்று நான் மென்றுவிழுங்கி சொன்ன மறுநிமிசம் வங்கியே ஸ்தம்பித்து போகுமளவு பழனியப்பன் கத்தினான்.

கண்ணாடி கதவுகள் சாத்தப்பட்டன. வங்கியின் மேலாளரும் அலுவலக ஊழியர்களும் என்னை சுற்றிலும் நின்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். வங்கியின் காவலர் சந்தேகத்துக்கு உரியவராக யாரும் வெளியே செல்லவில்லை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். பழனியப்பன் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தான்.

வங்கியினுள்ளே நின்றிருந்தவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த திருட்டு கொடுத்த பழைய சம்பவங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மேலாளர் தனது அறைக்குள் வரும்படியாக என்னை அழைத்து கொண்டு போனார். . திடீரென அந்த வங்கி இதற்கு முன்னதாக நான் பார்த்து அறியதா ஒரு புதிய இடம் போல தோற்றமளிக்க துவங்கியது. கண்ணாடி தடுப்புகள். கணிப்பொறி. மேஜை மீதுள்ள கண்ணாடி கோளம் யாவும் விசித்திரமான பொருட்கள் போல தெரிந்தன.

மேலாளர் அறை சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் காலண்டரில் இருந்த குழந்தை ஏன் இத்தனை நாட்கள் கண்ணில் படவேயில்லை. அந்த குழந்தை என்னை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. அந்த குழந்தை யாராக இருக்கும். அதற்கு நான் திருட்டு கொடுத்த விபரம் தெரியுமா? நான் அதை உற்று பார்ப்பதை விரும்பாமல் தலையை தொங்கிவிட்டு கொண்டிருந்தேன்.

வங்கிக்கும் எனக்குமான உறவு ஆறாண்டுகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. அநேகமாக தினமும் ஒருமுறை இங்கே வந்து போயிருக்கிறேன். ஊழியர்களுக்கு என்னை எளிதாக அடையாளம் தெரிந்திருந்தது. ஆனால் இன்றைக்கு அது எதுவும் பலன் அளிக்கவில்லை. வங்கியின் கணக்காளராகயிருந்த பெண்மணி ரொம்ப நாளாக உங்களை கவனிச்சிட்டு இருந்தவங்க தான் யாரோ திருடியிருக்கிறாங்க என்று சொன்னாள். என்னை யார் தினமும் கவனித்து கொண்டிருந்திருப்பார்கள்.

நான் என்ன உடை உடுத்துகிறேன். எப்படி தலைசீவியிருக்கிறேன் என்பதில் என் மனைவிக்கே அக்கறை கிடையாது. அநேகமாக எனக்கே அது தன்னிச்சை செயல்போல தான் நடக்கிறது. என்னை கவனித்து கொண்டேயிருந்த மனிதன் எப்படியிருந்திருப்பான். என்னை பற்றி எந்தவிதமான எண்ணங்கள் கொண்டிருப்பான். அவன் முகம் எவ்வளவு யோசித்தும் நினைவிற்கு வரவில்லை.

வங்கியின் காசோலைபிரிவில் உள்ள கண்ணாடி அணிந்த பெண் சார் எப்பவும் எதையோ யோசிச்சிகிட்டு வேற நிப்பாரு.. நானே பாத்திருக்கேன். ஒரு நாள் பேனாவை மூடிகிட்டே கையெழுத்து போட்டாரு.. எனக்கே சிரிப்பா இருந்துச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அது எல்லோருக்கும் ஏற்படகூடிய ஞாபககுறைவு தானில்லையா? ஏன் என்னிடம் இத்தனை நாள் அவள் இதை சொல்லவேயில்லை. ஒருவேளை மற்ற அலுவலர்கள் இதை பற்றி பேசி சிரித்திருப்பார்களா? நான் அவர்களில் எவரையும் நேர் கொண்டு பார்க்கவிரும்பவில்லை

பழனியப்பன் அலுவலகத்திற்கு தகவல் சொல்லியிருக்க வேண்டும். எனது அலுவலகத்திலிருந்து உயரதிகார் திருட்டு எப்படி நடந்தது என்பதை பற்றி விசாரிக்க துவங்கினார். என்னால் கோர்வையாக பதில் சொல்ல முடியவில்லை. தான் அங்கே வருவதாகவும் அதன் பிறகு காவல் நிலையம் செல்லலாம் என்றும் உறுதியாக சொன்னார்.

இந்த நாற்பத்திரெண்டு வயது வரை நான் பறிகொடுத்தவை எல்லாம் அற்பமான பொருட்கள் மட்டுமே. ஒரு முறை திருப்பதி போகும்போது எனது சூட்கேஸ் ஒன்றை யாரோ ரயிலில் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மற்றவகையில் நான் ஏமாந்தவை யாவும் சில்லறைகாசுகள். தலைவாறும் சீப்பு. குடை. ஒன்றிரண்டு டிபன்பாக்ஸ், வாழைப்பழங்கள் இவ்வளவு மட்டுமே.

வங்கி மேலாளர் என்னை பற்றிய சுயவிபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். ஆறுவருடத்திற்கும் மேலாக தினமும் இதே வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் மேலளாருடன் பேச வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் என் பெயரை கேட்டு கொண்டதேயில்லை. இன்றைக்கு முதல்முறையாக எனது பெயர் வீடு எங்கேயிருக்கிறது. பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்பதை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்.

பழனியப்பன் வெளியில் நின்றபடியே யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கடுமையேறியிருந்தது. எனது உயரதிகாரி வந்து சேர்ந்து வங்கிமேலாளருடன் ஏதோ பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் என்னையும் பழனியப்பனையும் மட்டும் காவல் நிலையம் அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். ஆனால் அலுவலகத்தின் காரை உபயோகபடுத்த வேண்டாம், ஆட்டோ பிடித்து போய் வரவும் என்று உயரதிகாரி கண்டிப்புடன் கூறினார்.

என்னை கைது செய்வார்களா என்று பயமாகயிருந்தது. பழனியப்பனிடம் இதை பற்றி எப்படி கேட்பது என்று கூச்சமாகயிருந்தது. ஒரு வேளை கைது செய்யப்பட்டால் என்ன செய்வது. உடனே ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்களா? வீட்டிலிருந்து கொண்டு வந்த டிபன்பாக்சை என்ன செய்வது? அலுவலகத்தில் உள்ள வேறு யாரையாவது சாப்பிட சொல்லிவிட வேண்டும். நேரமாகி விட்டால் அது கெட்டு போய்விடும். யாரை சாப்பிட சொல்லலாம் என்ற யோசனை திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது.

பழனியப்பனுக்கு என்னோடு பேசுவதற்கு பிடிக்கவில்லை போலும். அவன் ஆட்டோவில் இருந்தபடியே சாலையை வெறித்து பார்த்துக் கொண்டு வந்தான். நான் அவனிடம் தயங்கி தயங்கி என்னை கைது செய்தால் வீட்டுக்கு தகவல் தெரியப்படுத்துவார்களா என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. என்னால் அவனுக்கு அதிக சிரமமில்லையா என்று மறுபடியும் கேட்டேன். அவன் ஆத்திரத்துடன் நீ ஒரு மசிரும் பேச வேண்டாம். உன்னாலே நானும் தாலி அறுக்க வேண்டியிருக்கு என்று கோபத்தோடு சொன்னான்.

பழனியப்பன் எனக்கு கீழ் வேலைபார்க்கும் ஊழியன். இதுவரை அவன் இப்படி என்னிடம் பேசியதில்லை. பல நாட்கள் நாங்கள் வங்கியில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்து இண்டியானா பேக்கரியில் சாவகாசமாக அமர்ந்து பிளம்கேக்குகள் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு முறை பழனியப்பன் வங்கிக்கு என்னோட துணைக்கு வரவேயில்லை. நானோ அவன் என்னோடு சேர்ந்து வந்ததாக ரிஜிஸ்தரில் பதிவு செய்திருக்கிறேன். இவ்வளவு இருந்தும் இன்றைக்கு அவன் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு அதிருப்தி தருவதாகயிருந்தது.

போலீஸ் ஸ்டேஷனிற்கு இதற்கு முன்பு நான் சென்றதேயில்லை. பேருந்தில் பயணம் செய்யும் போது ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறேன். அதுவே அச்சம் தருவதாகயிருக்கும். எப்போதும் உள்ளே சிலரை லத்தியால் அடித்து கொண்டேயிருப்பார்கள் என்ற எண்ணமே எனக்கிருந்தது. சில திரைப்படங்களில் அப்படி காவல்நிலையங்களை காட்டியதும் நினைவிலிருக்கிறது.

நாங்கள் சென்ற காவல்நிலையம் மிக நவீனமாக இருந்தது. உள்ளே யாரையும் அடிக்கும் சப்தம் கேட்கவில்லை. காவலர்கள் அதி நவீன செல்போன்கள் வைத்திருந்தார்கள். கம்ப்யூட்டர் திரை முன்பாக உட்கார்ந்திருந்த ஒரு காவலரிடம் பழனியப்பன் ஏதோ சொன்னதும் எங்களை உள்ளே அழைத்து சென்றார்கள். இளவயதிலிருந்த போலீஸ் அதிகாரி விசாரிக்க துவங்கினார். வங்கி மேலாளர் கேட்ட அதே கேள்விகள். அதேபதில்கள்.

திருட்டை கண்டுபிடித்துவிடலாம் என்று ஆறுதல் சொல்லியபடியே இரண்டு நாட்களுக்கு பிறகு வரும்படியாக அனுப்பி வைத்தார். பழனியப்பன் தனக்கு வேலையிருக்கிறது என்று சொல்லி என்னை மட்டும் தனித்துவிட்டு கிளம்பி சென்றான். பேருந்தில் அலுவலகம் செல்லலாம் என்ற யோசனையோடு காத்திருக்க துவங்கினேன்.

பரபரப்பாக வாகனங்கள் போவதும் வருவதுமாகயிருந்தன. நகரில் எத்தனையோ ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் எவன் என்னிடமிருந்த பணத்தை திருடி சென்றது. ஒரு ஆளாக இருக்குமா அல்லது கும்பலா? என்னை போல பணம் பறி கொடுத்தவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள். அந்த பணத்தை என்ன செய்வார்கள்.? ஒவ்வொரு நாளும் என்னை போல யாரோ சிலர் இப்படி திருட்டு கொடுத்துவிட்டு புலம்பி கொண்டுதானிருப்பார்கள் இல்லையா? உடம்பு முழுவதும் எறும்பு ஊர்வது போல ஏதோ கேள்விகள் என்மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

என்ன யோசனை இது என்று என் மீதே எனக்கு ஆத்திரமாக வந்தது. நடந்தே அலுவலகம் செல்வது என்று முடிவு செய்து நடந்து செல்ல துவங்கினேன். இந்த நேரம் அலுவலகம் முழுவதும் என்னை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்கு போன் பண்ணி சொல்லியிருந்தால் மரகதம் அழுது கொண்டிருப்பாள். அல்லது பள்ளியிலிருந்து பிள்ளைகளை கூட பாதியில் அழைத்து கொண்டு வந்திருப்பாள்.

அவளுக்கு போன் செய்து பேசலாமா என்று தோணியது. ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இத்தனை வருடத்தில் அலுவலகத்திலிருந்து அவளுக்கு ஒரு முறை கூட போன் பண்ணி பேசியதேயில்லை. பொதுவாக வீட்டிலேயே அவளுடன் பேசுவது குறைந்து போய் தானிருந்தது. இந்த வருடம் அவர்கள் கல்யாண நாளை கூட இருவருமே மறந்து போயிருந்தார்கள். அதைப்பற்றி பிறகு நினைவு வந்த போது அவர் வெளிக்காட்டி கொள்ளவேயில்லை.

நடக்க நடக்க தான் காணாத நகரம் ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருப்பது போலவே இருந்தது. சாலையோரம் உள்ள மரநிழலில் ஒரு ஆள் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். வாகன இரைச்சலோ, ஜனநடமாட்டமோ அவனை எதுவும் செய்யவில்லை. உறக்கத்திலும் அவன் முகத்தில் சிரிப்பு கசிந்து கொண்டிருந்தது. தான் வாழ்நாளில் ஒரு முறை கூட இப்படி சாலையில் உறங்கியதில்லை. ஒரு வேளை உறங்க வேண்டிய சந்தரப்பம் வந்தால் கூட இப்படி தன்னால் உறங்க முடியுமா என்று தெரியவில்லை.

கட்டிடங்கள், விளம்பர பலகைகள், சாலையோர கடைகள் என யாவும் புதிதாக தெரிந்தன. அலுவலகம் வந்து சேர்ந்த போது யாரும் அவனோடு பேசவேயில்லை. உயரதிகாரி மட்டும் அவனை தற்காலிக நீக்கம் செய்திருப்பதகாவும் அவன் திருட்டு கொடுத்த பணத்தை ஒருவாரத்திற்கு திரும்ப செலுத்த வேண்டியது அவனது பொறுப்பு என்றும் அப்படி செலுத்த முடியாவிட்டால் அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.

தனது சம்பளம் முழுவதையும்ம பிடித்து கொண்டால் கூட இந்த பணத்தை கட்டுவதற்கு ஏழுட்டு வருசங்களாகிவிடும். அதுவரை வீட்டிற்கு என்ன செய்வது என்று குழப்பமாகயிருந்தது. தனது மேஜையின் அடியிலிருந்து டிபன்பாக்சையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து கொண்டு கிழே வரும் போது கடைநிலை ஊழியர் ஒருவர் தன்னை பற்றி ஏதோ சொல்லி சிரிப்பது தெரிந்தது.

வீட்டிற்கு போவதற்கு மனதில்லை. வங்கிக்கு திரும்ப சென்று ஏதாவது தகவல் கிடைத்திருக்கிறதா என்று கேட்கலாம் என தோணியது. ஒரு ஆட்டோ பிடித்து வங்கிக்கு போன போது உள்ளே கூட்டமேயில்லை. காலையில் நடந்த சம்பவத்தின் அறிகுறியே அற்றது போல இயங்கி கொண்டிருந்தது.

மேலாளர் அறைக்கதவை தள்ளி உள்ளே போனபோது அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். போலீசில் புகார் கொடுத்து வந்த விபரத்தை சொன்ன போது அவரிடம் எந்த முகமாற்றமும் இல்லை. தேநீர் குடித்து முடித்துவிட்டு எங்களாலே ஒரு உதவியும் பண்ண முடியாது. இது உங்க தப்பு என்றபடியே எழுந்து வங்கியின் உள்ளே செல்ல துவங்கினார். அந்த அறையில் தனித்து இருந்த போது சுழன்று கொண்டிருக்கும் காற்றாடி கூட என்னை திருட்டு கொடுத்தவன் என்று திரும்ப திரும்ப சொல்வது போலவேயிருந்தது.

ஐந்துமணிக்கு வெளியே வந்த போது வங்கியின் முத்திரைபோடுகின்றவன் என்னை தனியே அழைத்து இப்படி திருட்டு போறது இந்த பேங்கில நாலைந்து தடவை நடந்திருக்கு..நீங்க எதுக்கும் வெட்டுவான் கோயில்வரைக்கு போய் காசை வெட்டி போட்டு பாருங்க. திருடிட்டு போன பயலுக யாரா இருந்தாலும் ரத்த கக்கி செத்துபோயிருவாங்க என்றான்.

என்னால் அதை நம்பமுடியவில்லை. அதே நேரம் நம்பாமலும் இருக்க முடியவில்லை. வெட்டுவான் கோவில் எங்கேயிருக்கிறது என்ற விபரத்தை கேட்டு கொண்டு பேருந்தை பிடித்து பிராட்வேயில் உள்ள குறுகலான தெருக்களை தாண்டி போனபோது சிறிய கோவிலாக இருந்தது. துண்கள் கருமையேறியிருந்தது. ஆனால் கோவிலுக்குள் நிறைய கூட்டமிருந்தது.

பூசாரி ஒருவர் என்னிடம் திருடு போயிருச்சா என்று கேட்டார். நான் தலையசைத்தவுடன் பைக்கா? பர்சா என்னது என்று மறுபடியும் கேட்டார். அலுவலக பணம் என்று சொன்னதும் அவர் இதுக்கு எலுமிச்சைபழம் வெட்டி போடணும். இருநுறு ரூபாய் கொடுங்கள் என்று வாங்கி கொண்டு உள்ளே அழைத்து சென்றார்.

எண்ணெய் விளக்கின் நெடி நாசியில் ஏறியது. உள்ளே பத்திற்கும் அதிகமானவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பூசாரி அவர்களும் திருட்டு கொடுத்தவர்கள் தான் என்று சொன்னார். ஏனோ அவர்களை பார்க்கையில் சற்று ஆறுதலாகயிருந்தது. எல்லோரது கண்களிலும் பயம் ஒளிந்து கொண்டிருந்தது. வயதை மறந்து அவர்களோடு நெருக்கமாக இருப்பது போன்று தோன்றியது.

பூசாரி எலுமிச்சம்பழங்களை குங்குமம் பூசி அறுத்து போட்டுக் கொண்டிருந்தான். ரத்தம் போலவே சொட்டிக் கொண்டிருந்தது. திருட்டு கொடுத்தவர்களுக்காகவே இப்படியொரு கோவில் ஒன்றிருப்பது இன்று தான் எனக்கு முதல்முதலில் தெரிந்திருக்கிறது.

இந்த நகரில் இதுவரை எவ்வளவு திருட்டு நடந்திருக்கும் . ஏன் தினசரி பேப்பர் வாசிக்கையில் திருட்டு நடந்ததுபற்றிய செய்திகள் இதற்கு முன்பாக நமக்கு அதிரச்சியளிக்கவில்லை என்று யோசனையாக இருந்தது.

ஒரு வேளை நாளை காலை என்னைப்பற்றியும் செய்தி வெளியாகும். புகைப்படத்தோடு வெளியிடுவார்களா என்று தெரியாது. நான் சமீபமாக புகைப்படம் எடுத்து கொள்ளவில்லை. ஒரு வேளை பழைய புகைப்படம் எதையாவது வெளியிடுவார்களாக இருக்கும். இப்படிதான் இதற்கு முன்னால் வெளிவந்த திருட்டு கொடுத்த மனிதர்களின் புகைப்படங்களுக்கு பழையதாக இருந்திருக்குமா?

மனது ஒரு இடத்தில் நிற்கமறுத்து அலைந்து கொண்டேயிருந்தது. கோவிலில் தீபராதனை காட்டும் மணிச்சப்தம் கேட்டது. பூசாரி என்னிடம் பாதி எலுமிச்சைபழம் ஒன்றை தந்து ஒரு ருபாய் காசை வெளியே உள்ள பீடத்தில் வைத்து வெட்டி போடும்படியாக சொன்னார். ரத்தம் போல வடியும் எலுமிச்சை பழத்தை வாங்கி கொண்டு வெளியே வந்தேன்.

ஒரு முரட்டு ஆள் பலிபீடத்தின் அருகே நின்றபடியே காசை வெட்டி போட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து தந்தேன். அவன் ஒங்காரத்தோடு வெட்டி துண்டாக்கினான். பலிபீடத்தின் கீழே எண்ணிக்கையற்ற நாணயங்கள் துண்டாகி கிடந்தன.

கோவிலை விட்டு வெளியே வரும்போது இருட்ட துவங்கியிருந்தது. வழக்கமாக இந்த நேரம் வீட்டிற்குபோயிருப்பேன். அதன் பிறகு காலை அலுவலகம் கிளம்பும் வரை வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். ஆனால் இன்றைக்கு இங்கேயே இருட்ட துவங்கியிருந்தது.

நான் திருட்டு கொடுத்தவன். ஜெயிலுக்கு போக இருப்பவன். எனது வாழ்நாள் எண்ணப்பட்டுவிட்டது. இனிமேல் நான் வேறுவிதமான வாழ்க்கைக்கு பழகி கொள்ள வேண்டும். கோவிலை விட்டு நடந்து பேருந்தில் ஏறி கடற்கரையை அடைந்த போது கடற்கரை கொள்ளாமல் மக்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

வயதான குதிரையொன்று தனியே மணலை மேய்ந்து கொண்டிருந்தது. கடற்கரை மணலில் நடந்து உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன். தொலைவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நடைபயிற்சி செய்கின்றவர்கள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.

நான் நடைபயிற்சி செய்கின்றவன் இல்லை. எனது குழந்தைகள் கடற்கரையில் இப்படி விளையாடியதில்லை. இத்தனை மனிதர்களுக்கு நடுவிலும் நான் தனித்து இருப்பது போலவேயிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் மணலை கை நிறைய அள்ளி அள்ளி கொட்டிக் கொண்டேயிருந்தது.

மணலில் புதைந்து கிடந்த ஒரு சாவியொன்று கையில் அகப்பட்டது. வீட்டு சாவிபோலயிருந்தது. யாருடைய வீட்டு சாவியது. யார் தொலைத்திருப்பார்கள்.தொலைந்த மனிதன் அன்று கடற்கரையெங்கும் தேடியிருப்பான் இல்லையா? அந்த சாவியை என்ன செய்வது என்று தெரியாமல் கையில் வைத்தபடியே இருந்தேன்.

எவ்வளவு நேரம் கடற்கரையில் இருந்தேன் என்று தெரியாது. நியான் வெளிச்சம் கடல் மணலில்ஒளிர்ந்து கொண்டிருந்தது. காற்று மெல்ல என் உடலை தழுவி ஆடையை நெகிழ செய்து கொண்டிருந்தது. யாரோ ஒரு ஆணும் பெண்ணும் என்னருகே தழுவிக் கொண்டிருந்தார்கள். கடலின் சப்தம் மனதை சாந்தம் கொள்ள செய்திருந்தது. கடற்கரையில் கிடக்கும் கோடான கோடி மணல்துகள்களில் ஒன்று தான் தானும் என்று தோணியது.

ஆகாசம் நட்சத்திரங்களால் நிரம்பியிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நெடுநேரம் வெளியே இருந்துவிட்டேன் என்று தோணியது. காலையில் இருந்து மனது கொண்டிருந்த பரபரப்பு அடங்கியிருந்தது. வீடு வந்து சேர்ந்த போது குழந்தைகள் உறங்கியிருந்தார்கள். என்னை பார்த்த மாத்திரத்தில் மனைவி கதறி அழத்துவங்கினாள். அவள் சப்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருப்பவர்கள் சிலர் வந்து சேர்ந்தார்கள். என்னிடம் மாறி மாறி எப்படி பணத்தை தொலைத்தீர்கள் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் கூட எழுந்து வந்து அழத் துவங்கின. என் வீட்டில் இவ்வளவு அழுகையை நான் கேட்டதேயில்லை. யாருக்கும் பதில் பேசாமல் நின்று கொண்டேயிருந்தேன். அருகாமை வீட்டு பெண் தனக்கு நினைவுள்ள பழைய திருட்டு சம்பவம் ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் என் மனைவி அழுது கொண்டிருந்தாள் என்று தெரியாது.

எனக்கு பசிக்க துவங்கியிருந்தது. காலையிலிருந்து நான் எதுவும் சாப்பிடவில்லை என்று உணர துவங்கியது. அவளிடம் பசிக்கிறது என்றேன். அவள் அதான் எங்களை விழுங்கிட்டு வந்துட்டீங்களே .. இனிமே நாங்க பிச்சை எடுத்து தான் சாப்பிடணும் என்று கத்தினாள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எதை நம்புவது என்று தெரியவில்லை.

தெரியாமல் நடந்துவிட்டது என்று நான் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தேன். அதை யாரும் கேட்டு கொண்டது போல தெரியவேயில்லை. வீடும் பிள்ளைகளும் மனைவியும் கூட யாரோ போல தெரிந்தார்கள். எனக்கு என் மீதே ஆத்திரமாக வந்தது.

அப்போது கூட என்னிடமிருந்த பணத்தை திருடிய மனிதன் விழித்து கொண்டிருப்பானா? துங்கியருப்பானா ? அவன் மனைவிக்கு திருடிய விஷயம் தெரிந்திருக்குமா? அவனது பிள்ளைகள் பணத்தை எண்ணியெண்ணி பார்த்து சிரிப்பார்களா என்ற எண்ணம் வந்து கொண்டே தானிருந்தது.

நீண்ட நேரத்திற்கு பிறகு துக்கமும் வலியும் தாளமுடியாமல் நான் தனியே அழத்துவங்கினேன். அப்போது யாவும் மறந்து வீடே உறங்கி கொண்டிருந்தது.


No comments: