preload preload preload preload

Tuesday, September 2, 2008

எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள் 03

அன்பின் சகோதரர் பர்ஸான்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் 'நீண்ட தெரு' வலைத்தளம் பற்றிய அறிமுகத்தை எனக்கு சகோதரி பஹீமாஜஹான் அனுப்பியிருந்தார்.
அதில் எனது சிறுகதைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எல்லாச் சிறுகதைகளும் திண்ணையில் வெளியானவை. பரவாயில்லையா? http://mrishansharif.blogspot.com இவ்வலைப்பூவில் எனது சிறுகதைகள் உள்ளன.
நன்றி !

என்றும் அன்புடன், எம்.ரிஷான் ஷெரீப்.
-------------

நண்பரின் வேண்டுகோளுடன் அவரின் சிறுகதைகள் 03 இப்போது வலையேற்றம் செய்யப்படுகிறது. சிறுகதைப் பிரதிகளின் தொகுப்பான இந்த வலையில் சிறுகதைகள் பற்றிய நீண்ட உரையாடல் ஒன்றினை தொடர்வதே நோக்காகும். பிரதி வாசிப்பினையும் தாண்டி பிரதிகளை கொண்டு செல்ல முனைகிறேன்.

இத்தளம் பற்றிய அனைத்து விடயங்களையும் பின்னூட்டமாகவே இடுவது திறந்த உரையாடலுக்கு வாய்ப்பை அதிகரிக்கும்.
நன்றி, பர்ஸான்.ஏஆர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.

*****

"வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? "

"வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் "

*****

ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.

அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.

*****

" இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?"

" இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்."

"உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே."

"ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு."

*****

உங்களுக்குத் தெரியுமே...?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.

இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.

*****

"வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? "

"இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?"

"அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்."

"ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்"

*****

என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
"ச்சூ...ச்சூ..."
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.

*****

"பிள்ளைகள் வரேல்லியே?"

"இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்."

"ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை."

"இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்."

"ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது."

*****

அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.

உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.

*****

"உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? "

"ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க 'ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்'எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்."

*****

கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?

நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?

*****

"குழப்படியேதும் பண்றவவே?"

"இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ."

*****

உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.

பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?

சொற்களின் விளக்கங்கள் :-

# கனக்க - அதிகமாக
# வெள்ளனை - காலைநேரம்
# பொண்டு - பெண்கள்
# கன நாள் - நீண்ட நாட்கள்
# ராவு - இரவு
# முத்தம் - முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை - மிக விருப்பம்
# வடிவு - அழகு
# தேத்தண்ணி - தேனீர்
# குசினி - சமையலறை
# காக்கை - காகம்
# சாத்தாவாரி - ஒரு வகைக்கீரை
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது. நேற்றிலிருந்து கனவுகளிற்குள் மூழ்கத் தொடங்கியிருந்தவளின் மனதிற்குள் காதல் பாடல்களாய் ஒலித்துக் கொண்டிருந்தன.

சட்டென்று எழுந்து போர்வையை மடித்துவைத்துவிட்டு தாவணியைச் சரி செய்துகொண்டாள்.விளக்கேற்றினால் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கைகளின் தூக்கம் கலையுமென்று சிறுவயதிலிருந்தே பழகிய இடமாதலால் இருட்டுக்குள்ளும் எதிலும் முட்டிமோதாமல் குசினிக்கு நடந்தவள் அங்கிருந்த சிறு சிம்னி விளக்கைப் பற்ற வைத்து குசினிக்கு ஒளியூட்டினாள்.அடுப்பிலிருந்த குளிர்ந்த சாம்பலையள்ளி உள்ளங்கையில் ஏந்திப் போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தாள்.கடற்காற்று சிம்னி விளக்கை அணைத்து விடுவதிலேயே தன் பலம் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருந்ததைப் போலிருந்தது.

நேற்றுக் காலை தம்பி பிளந்து போட்டிருந்த விறகுத் துண்டுகளைப் போட்டு சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பினை எரிய வைத்துத் தண்ணீரைக் கொதிக்க வைக்கமுயன்றாள். ஈரலித்திருந்த விறகுத் துண்டுகளிலிருந்து பெரும் புகை கசிந்து குசினியைச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது.வேறொரு நாளென்றால் பெரும் எரிச்சலைச் சுமந்தவளாக முணுமுணுத்தபடி இருந்திருப்பாள். ஆனால் இன்று அப்படியில்லை. அவள் மனம் முழுவதிலும் ஸ்ரீதர் வண்ணம் வண்ணமாகக் கனவுகளைப் பூசி , வரப் போகும் வசந்தத்தை எதிர்பார்த்தவாறான மெல்லிசையொன்றை இசைத்துக் கொண்டிருந்தான்.

இருள் இன்னும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அதன் நீண்ட பெரும் கரங்கள் அவள் வீட்டை , அருகிலிருந்த கடலை, அவளது ஊரை முழு இரவும் ஆட்சி செய்து இன்னும் தன் பிடியில் கொண்டிருந்தது.அவளது இரண்டு தங்கைகளும் தம்பியும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். ஞாயிறு விடுமுறை நாளென்பதால் அவர்களை எழுப்பாமல் தூங்கவிட்டிருந்தாள். முன்னறையிலிருந்து அப்பா இருமும் சத்தம் கேட்டது. அவருக்கும் இவளைப் போல இரவு முழுதும் உறக்கம் இருந்திருக்காது.

செல்வராணி தன் விரலில் பளபளத்த புது மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள். குறைந்தது அரைப் பவுணாவது இருக்கும். அழகிய வடிவத்திலான தங்க மோதிரத்தின் மத்தியில் சிறிய சிவப்புக்கல் பதிக்கப்பட்டிருந்தது.அது எவ்வளவு பெறுமதியானதாக இருப்பினும் அவளுக்கென்ன ? ஒரு ஆண்மகன் முதன்முதலாக ஆசையாக அவள் விரல்களில் அணிவித்தது. இப்படிப்பட்ட ஒரு நாளுக்காகத்தானே அவள் இவ்வளவு நாளும் காத்திருந்தாள். இந்த உலகையே விலையாக்கி அவளிடம் கொடுத்து மோதிரத்தைத் திருப்பிக் கேட்டால் கூட கொடுக்கவே மாட்டாள் என்பதைப் போல மிக ஆசையாக ஒரு புன்னகையோடு அதனையே பார்த்தவாறிருந்தாள்.

தண்ணீர் கொதிக்கும் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் சிவப்புத் தேனீர் ஊற்றியெடுத்து கருப்பட்டித் துண்டோடு அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.ஏதோ யோசனையோடு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அப்பா இவளை ஏறிட்டுப் பார்த்து எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். திரும்பவும் குசினிக்கு வந்தவள் நேற்றுச் செய்து எஞ்சியிருந்த இனிப்புப் பலகாரங்களை ஒரு தட்டில் வைத்து அப்பாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள்.

அவளுக்குச் சட்டென்று தன் அம்மா நினைவு வந்தது. அவளது சிறுவயதில் ஏதாவது விஷேசங்களின் போது அம்மா இதுபோலச் செய்து அன்பாகத் தருவாள். கடைசித் தங்கையைப் பிரசவித்த அதே நாளில்தான் அம்மாவும் இறந்து போனாள். பிரசவத்திற்காக வீட்டிலிருந்து போகும் போது இவளை அருகில் அழைத்துத் தலையைத் தடவி ' வீட்டைப் பத்திரமாப் பார்த்துக்கோ ராணி ' என்று சொல்லிப் போனது இவள் காதுகளில் இன்றும் எதிரொலிக்கிறது. அம்மா அவளிடம் கடைசியாகச் சொல்லிச் சென்றபடியே இன்றுவரையில் அவள் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறாள். அருகிலிருந்து பார்க்கத்தான் அம்மா இல்லை.

நேற்று இந்த நேரங்களில் மனதில் எந்த ஆரவாரங்களுமற்று மிகவும் சாதாரணமாகவே எந்நாளையும் போல வளைய வந்தாள். எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்னர் அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போன ஸ்ரீதர் வீட்டிலிருந்து 'பெண்ணைப் பிடித்திருக்கிறது.இன்று மாலையே நிச்சயிக்க வருகிறோம் ' என்ற தகவல் கிடைக்கும் வரை தான். மீன் வியாபாரத்திற்காகப் போயிருந்த அப்பாதான் உடனே வீட்டுக்கு வந்து அவளிடம் விடயத்தைச் சொன்னார்.

அவளுக்கு தான் வானத்தில் மிதப்பது போல இருந்தது. எந்தப் பிடிமானமும் அற்ற ஒரு கொடியாகத் தன்னை எண்ணியிருந்தவளுக்கு ஒரு பெருவிருட்சமே படரக் கிடைத்தது போல ஆறுதலாக உணர்ந்தாள். இத்தனைக்கும் அவளைப் பெண் பார்க்க வந்த அன்று ஸ்ரீதரை அவள் ஒழுங்காகப் பார்க்கக் கூட இல்லை.ஏற்கெனவே இருபதிற்கும் மேற்பட்ட வரன்கள் வந்து பார்த்துப் போய்த் தட்டிக் கழித்து இருபத்தெட்டு வயதாகி நிற்கும் தன்னைக் கூட ஒருவர் பார்த்து ஏற்றுக்கொண்டு நிச்சயிக்க வருகிறார் என்பதே செல்வத்தைப் பெயரில் மட்டுமே கொண்டவளுக்கு பேருவகை கொள்ளவும் , அவர் மேல் விருப்பம் கொள்ளவும் போதுமானதாக இருந்தது.கொடுக்கப்பட வேண்டிய சீதன விபரப் பட்டியலும் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் வருகிற விடயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே தங்கைகளுடன் சேர்ந்து வீட்டைச் சுத்தப்படுத்தி இயன்றவரையில் அழகுபடுத்தினாள்.அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கதிரைகளை இரவல் வாங்கி வீட்டு முன் சாலையில் போட்டாள். இரண்டு தெரு தள்ளியிருந்த சித்தி வீட்டுக்குத் தம்பியிடம் தகவலனுப்பி சித்தியை வரவழைத்து வருபவர்களை உபசரிப்பதற்காக பலகாரங்கள் செய்தாள்.உடல் மற்றும் மனம் முழுதும் கல்யாணக் களை தாண்டவமாட அவள் இயந்திரமாக இயங்கினாள்.

நிச்சயம் செய்ய வருகிறார்களென்றதும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெரும் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள்.ஆனால் ஸ்ரீதரோடு அவனது பெற்றோரும் , அக்காவும் மட்டுமே வந்திருந்தார்கள். அக்கா குழந்தை எளிமையான அலங்காரத்தோடிருந்த இவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவனது உறவுகளும் இவளது நெருங்கிய சொந்தங்களும் பார்த்திருக்க , மகிழ்ச்சி முகங்கள் சூழ்ந்திருக்க அவளுக்கு அவன் மோதிரம் அணிவித்தான். ஒரு வாலிபனின் கரம் முதன்முதலாகத் தொட்டதில் இயல்பாகவே வெட்கிச் சிவந்தவளை ஸ்ரீதர் ஒரு கணம் இமைக்காமல் பார்த்திருந்தான்.திருமணத்தை வரும் மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று நடத்துவதாக உறுதி செய்யப்பட்டது.

அவள் வாழ்வினைப் போலவே விடிய ஆரம்பித்திருந்த கடல் வெளியை ஜன்னல் வழியே பார்த்தவாறிருந்தாள். திருமணத்திற்காக வீட்டுக்கு வர்ணம் பூசும் போது துருப்பிடித்திருந்த ஜன்னல் கம்பிகளுக்கும் வர்ணம் பூசவேண்டுமென எண்ணிக் கொண்டாள். அப்பா தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளைப் பட்டினியில் போட்டதில்லை.கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஓரளவு சேமித்து வைத்திருந்தார்.அது இது போன்ற நல்ல காரியங்களின் போது பெரிதளவில் உதவும் என்பது சரியாகிப் போயிற்று இன்று.

அவள் காலை உணவை சீக்கிரமாகச் செய்ய ஆரம்பித்தாள். அப்பா முகம் கழுவிக் கொண்டு அறைக்குள் போவது தெரிந்தது. பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வியாபாரத்துக்குச் செல்வது பகல்வேளையில் தான். அந்த நேரத்தில் தான் புதிதாக மீன்கள் கரைக்கு வரும். அவற்றை ஏலத்தில் வாங்கி சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்றுவருவது அவரது தொழில்.

காலை உணவுவேலைகள் முடிந்ததும் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் தனக்குச் சில உடுப்புக்கள் தைக்கக் கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.பூரணி அக்கா வீடு நாலு தெரு தள்ளியிருந்தது. இதுவரையில் எங்கேயும் தனியாகப் போக அப்பா அனுமதித்தது கிடையாது.அவளது எல்லாப் பயணங்களும் தம்பியுடனும் ,அப்பாவுடனுமே நிகழ்ந்திருக்கின்றன.

சமையல் முடிந்ததும் சிறிய சாப்பாட்டு மேசையில் உணவை ஒழுங்குபடுத்தி அப்பாவை அழைத்துப் பரிமாறினாள். அவர் சாப்பிட்டு முடிக்கையில் உடுப்புத் தைக்கப் போகவேண்டுமென்பதைச் சொன்னவளுக்கு எதிர்பாராவிதமாகத் தனியே செல்ல அனுமதி கிடைத்தது. எல்லாம் ஒரு மோதிரம் செய்த மாயம். ஒரு மோதிரம் அவள் வாழ்விலிருந்த சில தடைகளை ஒரு சாவியைப் போலத் திறந்து விட்டிருந்தது.

அவளும் தனது உணவை முடித்துக் கொண்டு ,மேசையை ஒழுங்குபடுத்தி, மீண்டும் முகம்கழுவி வந்தாள்.இருந்ததிலேயே நல்ல ஆடையொன்றை அணிந்து கொண்டவள் முகத்தில் லேசாகப் பவுடர் தடவிக் கொண்டாள். தைக்கப்பட வேண்டிய துணியை பையில் போட்டு எடுத்துக் கொண்டு தம்பி,தங்கைகளை எட்டிப் பார்த்தாள். அவர்கள் இன்னும் நித்திரையிலேயே இருக்க விலகியிருந்த போர்வையைச் சரிசெய்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வீதியிலிறங்கி நடந்தாள்.

அவள் பூரணி அக்கா வீட்டுக்குப் போய் துணி தைக்கக் கொடுத்துவிட்டு , தனது வீடு நோக்கிச் சில அடிகள் எடுத்துவைத்த வேளையிலேயே அந்தப் பெருஞ்சத்தம் கேட்டது.

************************************************

எல்லோருடனும் அவள் முகாமிலிருந்தாள்.அப்பாவினதும் , தம்பி , தங்கைகளினதும் சடலங்கள் சிக்கி உடனுக்குடனே புதைக்கப்பட்டன எனக் காற்று வழி வந்த செய்திகள் சொல்லின. அழுதழுதே கண்ணீர் வற்றிப் போன விழிகளிரண்டும் கருவளையங்களைச் சுமந்து சோர்ந்திருந்தன.தொண்டு நிறுவனங்கள் உணவையும் மருந்தையும் வழங்கியவாறு இருந்த போதிலும் அவளுக்கு எதுவும் தேவையற்றதைப் போலவே உட்காந்திருந்தாள். இழப்பின் வலியானது அவளை மிகவும் பாதித்திருந்தது. தூக்கமில்லை .பசிக்கவில்லை. அப்பாவின் பாசமுகம் ,தம்பி,தங்கைகளுடனான செல்லச் சீண்டல்கள் நினைவுகளில் மாறி மாறி இடறிக் கொண்டே இருக்கையில் இப்படியொரு இடர் சூழ்ந்த பொழுதில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டேனோ என்றும் துயருற்றுச் சோர்ந்தாள்.

அவளது வீடு இருந்த சுவடே இல்லையெனப் பேசிக் கொண்டார்கள். இருப்பினும் அப்பாவும் , உடன்பிறப்புகளும் உயிரோடு இருப்பார்களென்ற நம்பிக்கையின் கீற்று அவளுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது.

"ராணி அக்கா, உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க. உங்க பேரைச் சொல்லி விசாரிச்சாங்க "

ஒரு சிறுமி வந்து சொன்னதும் பரபரப்பாக உடனே எழுந்துகொண்டாள்.அங்கிருந்தபடியே முகாம் வாசலை எட்டிப் பார்த்தாள். ஸ்ரீதர் நின்றிருப்பது தெரிந்தது.கால்கள் துவழ முகாம் வாசலுக்கு வேகமாக நடை போட்டாள்.ஸ்ரீதர் இவளை ஏறிட்டுப் பார்த்து " உன்கிட்டக் கொஞ்சம் பேசணும் " என்று முகாம் சுவரோரமாக நகர்ந்தான். அவள் மௌனமாகப் பின் தொடர்ந்தாள்.

"உன் வீட்டுப் பக்கம் போனேன். வீடு இருந்த அடையாளமே இல்ல. அப்பா, தம்பி,தங்கச்சிங்க எல்லோருமே இல்லாமப் போயிட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க. நீ இங்கேயிருக்கிறது இப்பத்தான் தெரிஞ்சது..அதான் ஓடி வந்தேன். "

'ஒரு உறவெனத் தேடி இவராவது வந்திருக்கிறாரே ' என மனம் சிறிது ஆறுதலடைந்திற்று. இந்தக் கொடி படர வேண்டிய விருட்சம் , வனாந்தரமே அழிந்திட்ட போதிலும் கொடியைத் தேடி வந்திருக்கிறது. அந்த விருட்சத்தின் வேர்கள் முழுவதுமாக நனைந்திடும் அளவுக்குக் கதறியழும் வீழிநீரைக் கொடி கொண்டிருக்கிறது இப்போது.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தவாறே இருந்தாள். நிலத்தில் எதையோ தேடுவதைப் போலத் தலை குனிந்து கொண்டவன்,
" நம்ம நிச்சயதார்த்தம் நடந்த வேளையிலதான் அபசகுனமா இப்படிச் சுனாமியெல்லாம் வந்திருக்குன்னு என்னோட வீட்டுல நினைக்கிறாங்க. வீட்டுல உள்ளவங்களை மீறி உன்னைக் கட்டிக்கிறது சாத்தியமில்ல. அதான் நம்ம கல்யாணம் இனிமே நடக்காதுன்னு சொல்லிட்டுப் போக வந்தேன். அந்த மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்துட்டேன்னா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவேன் " என்றான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

திண்ணை
மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார்.தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த போது வெற்றிலை,பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் லேசான அதிர்வை உண்டாக்கியது என்னில்.

ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா,கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன்.இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.

சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப் பெய்யலாயிற்று.மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று.மழையின் எந்தப் பிரஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது.மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக,நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது.ஊருக்கே பழம் வீடாக இருப்பதில் மாமா சற்றுப்பெருமையும் கொண்டிருந்தார்.

சிவப்பு,கருப்புப் பூ அலங்காரங்களைக் கொண்ட வெண்சீமெந்துத் தரை எப்பொழுதும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டிருக்கும்.அந்தக் குளிர்மை,மாமாவின் வீடுமுழுக்க, அனல்பறக்கும் கோடை காலத்திலும் ஒரு புகையைப் போலப் படர்ந்திருக்கும்.வெளித்திண்ணை மிக அகலமாகவும் நான்கு தூண்களுடனும் இரண்டு அடிக்கும் சிறிது அதிகமான உயரத்துடனுமிருக்கும்.அதில்தான் நின்றுகொண்டிருந்தேன்.

இந்த வீட்டைப்பற்றி பெரியாச்சி என் சிறுவயதில் கதை,கதையாகச் சொல்லியிருக்கிறார்.முன்னர் பாய் பின்னுவதற்கும்,அவித்த நெல் காயப்போடுவதற்கும் பயன்பட்ட திண்ணை இப்பொழுது பெரியாச்சியின் வெற்றிலை இடித்தலையும்,மாமாவினுடைய பேரப்பிள்ளைகளின் விளையாட்டுக்களையும் அமைதியாகப் பார்த்தபடியிருக்கிறது.

பெரியாச்சியின் கணவர் கட்டிய வீடு இது.முற்காலங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து எங்களூர் பெரியாஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக வரும் ஜனங்கள் இரவுப்பொழுதைத் தங்கிச் செல்வதற்காகப் பொதுநோக்கில் இத்திண்ணை கட்டப்பட்டிருந்தது.திண்ணையிலிருந்து பார்த்தால் வீதியைத் தாண்டிப் பரந்த,எப்பொழுதும் வயல்காற்றைச் சுமந்தவண்ணமிருக்கும் வயலும் அதற்கப்பாலுள்ள ஆற்றங்கரை மூங்கில்களும் தெளிவாகத் தெரியும்.நான் முன்னர் அதில் பட்டம் விட்டிருக்கிறேன்.

பட்டம் நூலறுந்து போய் வயல்வெளிக்கடுத்து இருந்த பாடசாலைக் கூரையில் சிக்கும்,அந்தப் பாடசாலையில்தான் டீச்சர் அந்த நாட்களில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.டீச்சர் வீட்டுக்கு வயல்வெளியினூடாக நடந்து போகவேண்டும்.ஐந்தாம் வகுப்புப் பரீட்சை சமயம் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க வயல்வரப்பின் ஊடாக மழைக்கால இரவொன்றில் தவளைகள் கத்தக் கத்த,வெளிச்சத்திற்காக காய்ந்த தென்னஞ்சூளை எரித்து அவர் வீட்டுக்கு நான் சென்ற இரவு இன்னும் நினைவில் இடறுகிறது.

டீச்சர் வீடுதான் ஊரிலேயே மிகப்பெரிய தோப்பில் அமைந்த வளவு வீடு.வீட்டைச் சுற்றிலும் அழகிய சமதரைப்புல்வெளி.அழகழகான ரோஜாக்களும்,ஓர்க்கிட்களும் பூத்துக்குலுங்கும்.தெளிந்த நீரைக் கொண்ட பெருங்கிணறு ஒன்று அவர் வீட்டின் முன்னால் இருந்தமை ஊர் மக்களுக்கும்,அவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஐந்தாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் அவரது வகுப்புப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் சிறப்பாகச் சித்தியெய்தியமை அவரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.மாணவர்களெல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்து முற்றத்தில் பாய் விரித்து கேக்,பிஸ்கட்,இனிப்பு தந்து உபசரித்து மகிழ்ந்தார்.

டீச்சரின் கணவரை நான் பார்த்திருக்கிறேன்.டீச்சருக்கு நேர்மாறு அவர்.டீச்சரின் புன்னகை முகம் அவருக்கு எள்ளளவும் வாய்க்கவில்லை.எப்பொழுதும் ஏதோ கடுப்பானதொன்றை விழுங்கிவிட்ட மாதிரியொரு பார்வை, பிதுங்கிய விழிகளில் மிச்சமிருக்கும்.அவர் வாய்விட்டுச் சிரித்து யாராவது பார்த்திருந்தால் உலகின் எட்டாவது அதிசயம் அதுவெனச் சொல்லலாம்.

மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது.எதற்கோ வெளியே வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார்.

"ஐயோ..உள்ளே வாங்க மகன்..தெரியாத ஊடு மாதிரி வெளியே நின்னுக்கிட்டு..மழையில நல்லா நனஞ்சுட்டீங்களா?
மருமகன் வந்திருக்கிற விஷயத்தை நீங்களாவது சொல்ல வாணாமா?"
பெரியாச்சியை லேசாகக் கடிந்துகொண்டார் மாமா.

நான் சப்பாத்தைக் கழற்றிவிட்டு உள்ளே போக முற்பட்டேன்.அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும்.நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.

"பரவாயில்ல மகன்.அப்படியே வாங்க..மழை வரணும் போல இருக்கு..உங்கள இங்கே கூட்டி வர."
மாமியின் குரலில் ஒளிந்திருந்த கிண்டலோடு நானும் அப்படியே உள்நுழைந்தேன்.

பெரியாச்சி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார்.மழையும்,திண்ணைகளும் அவருக்குத் தோழிகள் போலும்.அவரது பொக்கை வாய் வெற்றிலையை மெல்லுவதைத் தூரத்திலிருந்து பார்க்கையில் மழையோடும்,திணணையோடும் அவர் கதைத்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.இடைக்கிடையே சிவந்த வெற்றிலைச் சாற்றினை தெருவில் வழிந்தோடும் மழை நீரில் துப்புவதானது மழைத் தோழி மீதான செல்லக் கோபத்தை வெளிப்படுத்துவதாகப் பட்டது எனக்கு.

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்?இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்?அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

மாமா சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார்.பழங்காலத்தை மரச்சட்டங்களில் பிணைத்துக் கொண்டுவந்ததைப் போல வீட்டுக் கூடத்தின் வலது மூலையில் அது அன்றையகாலம் தொட்டு இருந்து வருகிறது.புதிதாகத் திரும்பவும் பின்னியிருந்தார்கள்.மதிய சாப்பாட்டிற்குப்பின்னரான பகல்தூக்கம் மாமாவுக்கு அதில்தான் என்பது ஞாபகமிருக்கிறது.சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.எந்தவொரு அசைவுமற்று,சாய்த்து உட்காரவைக்கப்பட்ட சிலை மாதிரி தூங்கிக் கொண்டிருப்பார்.

அப்பொழுதுகளில் நானும்,என் வயதொத்த சிறுவர்களும் தூங்கும் இவர் மூக்குக்கருகில் மிளகாய்த் தூளை விசிறிவிட்டு ஒளிவோம்.பெரும் தும்மல்களோடு எழுந்து ஒன்றும் புரியாமல் மிக நீண்ட நேரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி விழிப்பார்.மாட்டிக் கொண்ட ஒரு நாளில் இடது காதைச் செமத்தியாகத் திருகிவிட்டார்.

இப்பொழுது தூங்கவில்லை அவர்.நான் வரமுன்பே தூங்கியெழுந்திருந்திருக்க வேண்டும்.இல்லாவிடில் இருபது வருடத்திற்கு முன்னைய மிளகாய்த் தூள் இப்பொழுது அவர் மூளையில் உறைத்திருக்கவேண்டும்.மழைக்கு இதமானதாக மாமி கோப்பி தந்தார்.

"மகன் எங்கட ஊட்டுக்கெல்லாம் வரணுமெண்டா இப்படித்தான் மழை பெய்யணும் போல"
"அப்படியில்ல மாமி.சரியான வேலை.சனி,ஞாயிறு லீவு எண்டாலும் சனிக்கெழம விடிய முந்தி ஊருக்கு வர பஸ் எடுத்தா,பாருங்க எத்தனை மணிக்கு வந்து சேர்றதுன்னு".

கொழும்பிலிருந்து பஸ் ஏறும்போது மழையிருக்கவில்லை.இடையில் தாண்டி வந்த எந்தெந்த ஊர்களில் மழை பெய்துகொண்டிருந்தது எனவும் தெரியாதவாறு பஸ் இருக்கையில் அமர்ந்து டிக்கட் எடுத்ததுமே தூங்கிவிட்டிருந்தவனை பழகிய கண்டக்டர்தான் எழுப்பி,இறக்கி விட்டிருந்தார்.பஸ் செல்லும் தெருவோரத்து வீடென்பதனால் மழை தொப்பலாக நனைத்துவிடும் முன்பு மாமா வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி விட்டிருந்தேன்.

பெரியாச்சிக்கு இந்த விடயம் எப்படித்தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்? உலகத்தின் ஓசைகளெல்லாம் கேட்டு ஓய்ந்த பெரியாச்சியின் செவிகள் இப்பொழுது வேறு ஓசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை.காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது.ஏதாவது அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டுமென்றால் கூட செய்கை மொழி மட்டுமே உதவும் நிலையில் அவரது காதுகள் இருந்தன.

இந்நிலையில் டீச்சர் பற்றிய விபரம் எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? ஒருவேளை பொய்யாக இருக்குமோ?யாராவது வெற்றிலை ஒரு வாய்க்கு வாங்கவந்தவர்கள் சொன்னதை பெரியாச்சி தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ?டீச்சரின் ஐம்பது வயதுகளைத் தாண்டி,இருபத்தாறு வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு அவர் எதிர்பார்த்திருந்த விவாகரத்துக் கிடைப்பது என்பது கிராமங்களில் இன்னும் அதிர்ச்சிக்கும்,சலனத்துக்கும் உரிய விடயமாகவேயிருந்தது.

டீச்சர் எனக்கு எனது இரண்டாம் வகுப்பிலேயே அறிமுகமானார்.மடக்கக் கூடியதான சிறுகுடையும்,கைப்பையும் எப்பொழுதும் அவர் கூடவே வரும்.காலைவேளைகளில் எப்பொழுதும் சிவந்திருக்கும் விழிகளிரண்டும் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன.இரண்டாம் பாடவேளையின் போது தினமும் ஒரு இளமஞ்சள் நிற மாத்திரையை கைப்பையில் இருக்கும் சிறுபோத்தலிலுள்ள நீரைக் கொண்டு குடித்துக் கொள்வார்.

அன்றொருநாள் அப்படித்தான்.மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டவர் தண்ணீர் கொண்டு வர மறந்திருந்தார்.ஒரு மாணவனை அனுப்பி வெந்நீர் கொண்டுவரச் சொன்னார்.அவனோ ஏதுமறியாதவனாக ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் கொண்டுவந்து கொடுக்க,அப்படியே வாயிலூற்றிக் கொண்ட டீச்சருக்கு புரையேறி,வாயெல்லாம் வெந்துவிட்டது.டீச்சர் கைக்குட்டையால் வாய்பொத்திக் கொண்டு மௌனமாக அழுததை அன்றுதான் கண்டோம்.நாங்களெல்லோரும் பதறிவிட்டோம்.அந்த மாணவனும் பயத்தில் அழுததைக் கண்டவர் 'எனக்காக வருத்தப்பட நீங்களாவது இருக்கீங்களே' எனச் சொல்லி அணைத்துக் கொண்டார்.

"மாமி,பெரியாச்சி சொல்வது உண்மையா?"
"என்ன மகன்?"
"இல்ல ! டீச்சர்...?"
"ஓ மகன்..அவங்க விரும்பின விடுதலை கிடைச்சிட்டுது.எவ்ளோ காலத்துக்குத் தான் தன்ட புருஷன் இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறதப் பொறுத்துக்கொண்டிருக்குறது?அவ இருபது வருஷத்துக்கும் மேல பொறுத்துப் பார்த்தாச்சுதானே...?"
"இனி எதுக்கு 20 வருஷம் காத்திருக்கணும்? இந்த விஷயம் தெரிய வந்த உடனே டிவோர்ஸ் கேட்டிருக்கலாமே?சும்மா அவங்க வாழ்க்கையையும் வீணாக்கிக் கொண்டு..."
"அப்டியில்ல மகன்.நாலு பொம்புளப் புள்ளைகள வச்சிக்கொண்டு,இதுல தகப்பனும் இல்லையெண்டா அதுகளிண்ட எதிர்காலத்துல எவ்வளவு சிக்கல் வருமெண்டு டீச்சர் யோசிச்சிருப்பாங்க.இப்ப எல்லோரையும் நல்லபடியாக் கரை சேர்த்திட்ட பிறகு அவங்க தன்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டிருக்காங்க.இனி யாரையும் அவ எதிர்பார்த்துட்டிருக்கத் தேவையில்ல.பென்ஷன் காசு வருது.புள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்குறதாலக் காசு வருது.பின்னக் காலத்துக்கு அது போதும்தானே "
மாமா சொன்னதற்கு எந்தவொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை.

டீச்சரின் இருபது வருடப் பொறுமையின் பலனாக அவர் எதிர்பார்த்திருந்த விடுதலை கிடைத்திருக்கிறது.டீச்சரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.அன்றைய காலத்தில் அத்தனை கவலைகளையும் நெஞ்சுக்குள் புதைத்துக் கலங்கிய செவ்விழிகளோடு உலவும் டீச்சரின் விழிகள் இப்பொழுது பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கக் கூடும்.

மழை விட்டிருந்தது.மாமா,மாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தேன்.திண்ணையின் மூலையில் துளித்துளியாய் வாளியில் சேர்ந்திருந்த மழைநீரைக் கொண்டு பெரியாச்சி திண்ணையை முழுமையாகக் கழுவி விட்டிருந்தார்.மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து,நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.

1 comment:

Unknown said...

நன்றி சகோதரர்.

கதை சம்பந்தமான நண்பர்களின் கலந்துரையாடலுக்குக் காத்திருக்கிறேன்.