preload preload preload preload

Tuesday, September 2, 2008

அப்துல் றஸாக் சிறுகதை

வீட்டுக் குறிப்புகள் - 19
01.
(கி ழக்கு மாகாணத்திலுள்ள அக்கரைப்பற்று எனும் ஊரில்)

01 பெட்டி சக்கைக்கல் - 1600.00
1/4 பெட்டி கொங்கிறீட் கல் - 7500.00
01 அம்பாறைச் செங்கல் - 6.00
01 லோடு ஆத்துமண் - 2500.00
01 லோடு கடற்கரை மண் - 1100.00
01 பக்கட் சீமெந்து - 800.00
ஒருநாள் மேசன் கூலி (ஒருசோடிக்கு) - 2000.00

மஹிந்தவின் ஆட்சியில் இதுவொன்றும் ஆச்சரியப்படத்தக்க விலையில்லை என சிலிர்த்துக்கொண்டார் ஆதம்பாபா. புதிதாக வீடு கட்ட ஆரம்பித்த நாளில் இருந்து இக்கணம் வரை வியர்வை வடிந்து கசங்கிய தாளினை நூற்றியோராவது தடவையாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டார். அவரது கடைசி மகள் சரீனா சென்ற வருடம் பாவிக்காத ரெட்டை ரூல் கொப்பியின் நடுப்பக்கத்தை கிழித்து எழுதிக் கொடுத்திருந்தாள். நெடுநாள் ஆசையினால் அவரின் மூத்த மகனின் விருப்பத்திற்கேற்ப வீட்டுக்கு ஒரு படம் வரையவேண்டுமென்று ஒத்துக் கொண்டதற்கிணங்க படம் கொண்டுவந்த கையோடு அந்த வீட்டுக் கலைஞன் ஆசுவாசமாகக் குந்தியிருந்து சொன்ன கணக்குகள்தான் இவை. இருபத்து நான்கு வருடங்களுக்கு முன் தான் வீட்டிற்கும் தான் கட்டப்போகும் வீட்டிற்கும் கடக்க முடியாத இடைவெளியாக பணம் ஊதிப்பெருத்திருப்பதை நினைத்து பெருமூச்சு விட்டார்.
(சிறுகதையொன்றின் ஆரம்பம்)

02.
"சுனாமிக்கு முதல்லண்டா லேசா ஊட்ட கட்டிரலாம். ஆனா சுனாமிக்குப் பொறகு நெனச்சிம் பாக்கத் தேவல்ல. சாமானுக்கெல்லாம் கங்கெட்ட வெல. அப்பிடி இப்பிடியெண்டு எல்லாத்தயும் வாங்கினாலும் மேசன் சம்பளம் கொடுத்துக் கட்டமாட்டா. நெறய என் ஜீ ஓக்கள் வந்து ஊடுகள் கட்டினதானே. அவிய சம்பளத்த அள்ளிக் கொடுத்து இந்த மேசன்மார பழுதாக்கி ப்போட்டாங்க. நெனச்சநேரம் வந்து நெனச்ச நேரம் போற தொழில். கேக்கிற சம்பளம் கொடுக்கணும், நாள்ச் சம்பளமா? இல்ல ஸ்கெயார் கணக்கா ஆதாயம் எண்டு சொல்ல ஏலாத அளவுக்கு ரெண்டும் வித்தியாசம் தெரியாமப் போச்சி. சம்பளம் தவிர காலச் சாப்பாடு, பகல்ச் சாப்பாடு, தேத்தண்ணி, ரிங்ஸ் செலவெண்டு அதுவேற. ஊடு கட்றத விட சும்மா இருக்கலாம்."
(ஆய்வொன்றிற்கான நேர்காணல்)

03.
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் சம்பந்தமாக நம்ப முடியாத பல கதைகள் உலவுகின்றன. ஒரு அமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை இன்னொரு அமைச்சர் சீர்குலைத்ததாக சொல்லப்படுவதில் பல நியாயங்கள் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதற்கு முன்னரும் சில திட்டங்கள் இப்படியாக அலைக்கழிந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தால் எங்களுக்கும் அதில் ஒரு பங்கு தரவேண்டுமென அப்பிரதேசத்தில் இருந்த சிங்களவர்கள் கேட்டதாகவும் கதை வந்தது. பாதிக்கப்படாதவர்களுக்கு எவ்வகையிலும் வீடு வழங்க வேண்டியதில்லை என்று சொன்னதற்காக அங்குரார்ப்பண வைபவம் தேரோ ஒருவரின் தலைமையில் எதிர்ப்புப் போராட்டத்திற்கு உள்ளானது. இதனால் முஸ்லிம் - சிங்கள கலவரம் ஒன்று தோன்றலாமோ என்ற அச்சம் உருவானது. இப்போது இத்திட்டம் பற்றி பொதுமக்கள் யாரும் எக்கதையும் பேசுவதில்லை.
(பத்திரிகைச் செய்தியொன்று)

04.
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான வீட்டு மாதிரிகள் உண்டு. உன்னிப்பாக அவதானித்தால் இம்மாற்றம் எளிதில் புலப்படும். உதாரணம் சொல்வதானால், கல்முனை, சாய்ந்தமருதுவில் உள்ள வீடுகள் அதிகம் கொங்கிறீட் கலவைகளைத் தாங்கியவை. பெரும்பாலும் மாடிகளாக மாறிக்கொண்டு வருபவை. அறைகள் வளைவுகளாக காணப்பட்டு கிணறுகள் போல உயரம் பெற்றுக்கொண்டு போகும். வீட்டின் புறப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அணுவணுவாக அலங்காரம் பெற்றிருக்கும். அறைகளுக்கு மேலே முகடுகளில், உட்புறப் பகுதிகளில் அதிக செலவுடன் அலங்காரங்கள் உருப்பெருத்துக் கொண்டு செல்லும்.

மருதமுனை வீடுகள் சிறியவை. எளிமையானவை. பழமையின் வாசம் தங்கியிருப்பவை. அனேக வீடுகளோடு சேர்த்து ஒத்தாப்பு இறக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின்புறம் இருக்கும் சின்ன இடைவெளிக்குள் பாவனைக்குதவாத பொருட்கள் குவித்து வைக்கப்பட் டிருக்கும்.

பொத்துவில் பிரதேச வீடுகள் களிமண்ணிலிருந்து செங்கற்களுக்கு மாறிக் கொண்டிருப்பவை. உயரம் குறைவானவை. இரட்டைக்கல் வைத்து கட்டப்பட்டிருப் பதை விட ஒற்றைச் செங்கல்லுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். வளவின் மையப்பகுதி சார்ந்தே இவை கட்டப்பட்டிருக்கும்
(பிரதேச வரலாற்று நூலொன்றிலிருந்து)

05.
பின்நவீனத்துவ அமைப்புடைய வீடுகளுக்கு முகடுகள் கூர்மையானதாக இல்லை. முகடுகள் அதிகாரத்தின் உச்சவெளிப்பாடாகும். பெருங் கதையாடலின் ஒற்றைத் தன்மையான கூர் முகடுகளைத் தகர்ப்பதற்காகவே இரட்டைக் குறியீPட்டுத் தன்மையுடன் முகடுகள் அமைக்கப்படுகின்றன. நியூயார்க் நகரத்தில் இருக்கும் யுவுரூவு கட்டிடம் இத்தகைய இரட்டைக் குறியீட்டுடன் தோன்றுகிறது. சாதாரண பார்வையில் சொல்வதானல் முகடுகள் இரக்கம், மனிதாபிமான மற்றவை. சிறு பறவையாகிய காகம் கூட அமர முடியாத கூர்முகடுளால் எவ்வித பயனுமில்லை. தட்டையான முகடுகளில் இருக்கின்ற பயன்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(பின்நவீனத்துவ கோட்பாட்டுப் பகுதி)

06.
அண்மைக்காலமாக நிதியியல் நிறுவனங்கள் தனிப்பட்ட வீடமைப்பு நிர்மாணங்களுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்குவதும் அதிகரித்துள்ளது. 2006 ஆண்டில் முக்கிய வர்த்தக வங்கிகள் ரூ. 34.227 மில்லியன் பெறுமதி கொண்ட 97.983 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. வீடமைப்பு வங்கிகளான அரச ஈட்டு முதலீட்டு வங்கி, வீடமைப்பு அபிவிருத்தி நிதிக்கூட்டுத் தாபன வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பன 2006 இல், 2005 இன் 22.501 கடன்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 12.187 மில்லியன் கொண்ட 35.137 வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளன. தற்போது எந்தவொரு வங்கியிலும் வீடமைப்புக் கடனை 22 வீதத்திற்கும் குறைவான வட்டியில் பெற முடியா துள்ளது. இந்நிலையில் செலான் வங்கி மட்டும் 17 வீதத்திற்கு வீட்டுக் கடன் வழங்குவதாக பெருமையுடன் பறைசாற்றி விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றது.
(மத்திய வங்கியின் ஆண்டறிக்கை)

07.
வீடு பற்றிய விடயத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அக்கறையெடுக்க வேண்டும். ஊருக்குள் வந்த கடல் அலைகளால் நாம் பெற்ற பாடம் வீட்டை திண்மை யுறக் கட்டுவோம் என்பதல்ல. அலைகளின் பெருமூச்சுக்கு வளைந்து கொடுக் கும் ஜப்பான் ரக வீடுகளைக் கட்டுவோம் என்பதுதான். ''உலகெங்கும் தொடரும் நில நடுக்கம் இங்கும் தொடரா தென்பது என்ன நிச்சயம்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி நிற்கும் உலகத் தகடுகள் நாளை இறங்குகின்ற போது நிலம் மெல்ல அதிர்ந்து கொள்ளும்'' என மார்க்சிய செய்தி நிறுவ னங்கள் அறிவித்துக் கொண்டிருக் கையில் முதலாளித்துவ பெரும் போடிகள் கட்டிடப் பொருட் களுக் கான விலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
(இங்கு மார்ச்சியமும், முதலாளித்துவமும் எப்படி வந்தது?)

1. நிலநடுக்கம் ஏற்பட்டால் கோபுரங்கள் குடிசைகளாகும், குடிசைகள் கோபுரங்களாகும்.
அதுவரை இன்னொரு மார்ச்சியப் புரட்சிக்காகக் காத்திருக்க வேண்டும் என சிந்திக்கும் மார்க்சிய
செய்தி நிறுவனங்கள், இன்றே அப்புரட்சியைக் காண பிரச்சாரம் செய்யலாம்.
2. அதீத உற்பத்தியும், ஆடம்பரமும் நிறைந்த கட்டிடப் பொருட்களில் அதிகம் காசு பார்க்கலாம்
என நம்பும் முதலாளித்துவ நிறுவனங்கள் விளம்பரங்களைப் பரப்பி, மக்களின் மோகத்திற்கேற்ப விலைகளை அதிகரிக்கலாம்.
(உள்ளுர் சமூகசேவை அமைப்பொன்றின் ஆய்வறிக்கை)

08.
சனத்தொகை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கத்துடன் வீடுகளுக்கும் நகர உட்கட்டமைப்புக்குமான கேள்வி துரிதமாக விரிவாக்கம் பெற்றிருக்கிறது. சனத்தொகை ஆண்டிற்கு 1.1 சதவீதமாக வளர்ச்சி பெறுவதுடன் நகரக் குடித்தொகை 3 சதவீதமான உயர்ந்த வீதத்தினால் வளர்ச்சியடைந்து வருகிறது. 2016 ஆண்டளவில் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட தொகையினர் நகரப்பகுதிகளில் வசிப்பர் என்று மதிப்பீடுகள் காட்டுவதால் நகர உட்கட்டமைப்பில் துரித அபிவிருத்தி தேவைப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளுக்கான புதிய கேள்வி 100.000 அளவில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலாக 350.000 வீடுகளுக்கான பற்றாக்குறை உள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஏற்கனவேயுள்ள வீடுகளில் 30 சதவீதமானவளவு (1.3 மில்லியன்) வீடுகள் ஓரளவு நிரந்தரமானவையாக அல்லது திடிரென ஏற்பட்டவையாக அல்லது அவசரமாக கட்டப்பட்டவையாகவும் அல்லது வகைப்படுத்தப்படாதவையாக கணிசமானளவு முன்னேற்றம் தேவைப்படுவனவாகவுள்ளன. சுனாமியினால் அழிக்கப்பட்டோ அல்லது சேதமடைந்த 114.000 வீடுகளில் அண்மையக்காலம் வரை 78.000 வீடுகளின் கட்டுமானப்பணி பூர்த்தியாக்கப்பட்டுள்ள.
(வீடமைப்பு அமைச்சு)

09.
வீடு. பெ.
1. குடியிருப் பதற்காக (செங்கல், மண் முதலியவற்றால்) ஏற்படுத்தப்பட்டது house. நகரில் சொந்தமாக வீடு கட்டியிருக்கிறார். / வீட்டுவாடகை சற்று அதிகம்.
2: மோட்சம் heaven.
3: (சேதி.) ஒருவர் பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகத்தை முதலாவதாக கொண்டு பண்ணிரண்டு கிரகங்களும் வகுப்படும் இடம் (in ons’s horoscope)
(க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி)

10.
''வீடு கட்டுவது பற்றிய இனவாதக் கருத்தொன்று உங்கள் முன் சொல்வதற்காக என்னை மன்னியுங்கள் சகோதரர்களே! நாம் வீடுகளை ஏன் மாற்றினத்தவர் களைக் கொண்டு நாம் கட்ட வேண்டும்? இன்றைய நிலையில் அவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாதென்பதற்கப்பால் நமது பொருளாதாரத்தை அவர்கள் சுரண்டிக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்களா? எங்கள் ஊரில் மட்டும் வீடு கட்டும் தொழிலாளர்கள் திரட்டும் ஒரு நாள் சம்பளம் பத்து இலட்சத்தையும் தாண்டுகிறது என்றால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? பொதுவாக ஆய்வொன்று செய்யப் பட்டது. இத்தொழில் செய்பவரை 'மேசன்' என்று அழைப்பதைத்தான் நாங்கள் விரும்பவில்லை'' என்று பலர் சொல்கிறார்கள். அப்படியாயின் பெயரை மாற்றுவோம். பெயரில் என்ன இருக்கிறது, ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத் தால்தான் என்ன? என்று சேக்ஸ்பியரின் மேற்கோள் ஒன்று கூட இருக்கிறது. 90ம் ஆண்டு காலப்பகுதிகளில் பிரச்சி னை உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது நாம் தானே வீடுகளை கட்டினோம்! நமது கலாசாரத்தையும், தனித்துவத்தையும், கட்டிடக் கலை நுட்பங்களையும் வடிவமைப்பதில் இப்போது நாமேன் பின்னிற்கிறோம்? தொழில் வாய்ப்பில்லாமல் அலையும் ஒரு தொகை இளைஞர்கள் வியர்வை சிந்தி தமது உழைப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம்தேச பொருளாதார முறையும், அழகியல் முறையும் ஒன்றினையும் இடமான வீடு கட்டுகின்ற பணி பற்றி இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும் சகோதரர்களே!''
(மேடையில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி)

11.
வீடு வரையும் கலைஞர்கள் தாங்கள் வரைவது போல எந்த வீடும் கட்டப்படுவதில்லை என குறைபட்டுக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் கலைஞர்களின் வரைபடத்தை பின்பற்றுகின்ற கட்டிடத் தொழிலாளிகள் ஓரிடத்தில் மட்டும் அதை ரகசியமாக மீறி தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். இவர்களுக்கும் கட்டிட தொழிலாளர்களுக்குமான பூனை - எலிப்பகை ஆதியிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி தனக்கு மயக்கம் வரச் செய்த காரணத்தினால் அவ்விருவரையும் விரட்டி விட்டு தனது வீடு கட்டும் பணியை இடை நிறுத்தியிருக்கிறார் அயல்வீட்டுக்காரரொருவர்.
(அயல்வீட்டுக்காரரின் பேச்சு)

12.
பாலுமகேந்திராவின் வீடு என்கின்ற திரைப்படம் வீடு கட்டுவதிலுள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுகின்றது. இது ஒரு திரைப்படமே அல்ல என இப்போதும் விவாதிக்கின்ற நண்பர்கள் உண்டு. படத்தில் வீடு கட்டி முடிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்தான் அவ்வீடு முடிந்திருப்பதாக ஆனந்த விகடனில் வாசிக்கக் கிடைத்து சிலரிடம் காட்டியபோது ஓரளவு சமாதானம் அடைந்தார்கள்.
(சினிமா விமர்சனப் பகுதியொன்று)

13.
வீடு கட்டுகின்ற மேசன் புலியாக இருக்கலாமா? என்ற சந்தேகம் இங்கு எல்லோருக்குமுண்டு. இதனால் ''இரவில் புலி, பகலில் மேசன்'' என்றளவிற்கு ஒரு பழமொழியையே உருவாக்கி விட்டார்கள். இம்முடிவை அவர்கள் எட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு.
1. சரியான குழப்பநாள் ஒன்றில் வீடு கட்ட வந்த மேசன் ஒருவன்,சக தொழிலாளியைப் பார்த்து ''நல்லா கட்டு மச்சான். இது நாம இருக்கிற வீடுதானே'' என்று சொல்ல அதைக் கீழே இருந்து
கேட்ட வீட்டுக்காரி கத்திக்கொண்டு அடுத்த வீட்டுக்கு ஓடியிருக்கிறார்.அன்றிலிருந்து அவர்கள்
யாரும் வேலைக்கு வரவில்லை என்பதோடு வேலை செய்ததற்குமான கூலியைக் கூட பெற்றுக்கொள்ள வில்லை.
2. ஊரில் மேசன்மார் மிகக்குறைவாக வேலைக்கு வருகின்றனர் என்றால் அன்றைக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றதென்று அர்த்தம். இதை 'யாராவது விருந்துக்கு வருகிறாங்களா?
தெத்திக்காட்டு காகம்' என்பது போல ஊர்மக்கள் அடையாளம் கண்டு கொள்வது.
3. மேசன்மார் தங்களுடைய தொழிலுக்கான உபகரணங்கள் வைத்திருக்கின்ற பையை 'ஆயுத பேக்கு' என்றுதான் அழைப்பார்கள். இது கேட்டு துணுக்குற்று எறியப்பட்ட நிறைய குழந்தைகளும்,
பெண்களும் இங்கிருப்பது.
4. சில மேசன்மார் தங்கள் வாயாலேயே கெட்டுப்போய், தாங்கள் செய்த வீர தீரச்செயல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, பெருமைக்காக அவிழ்த்து விடுவது.
5. ஒன்றில் அதிகமாகப் பேசுவது அல்லது ஆழ்ந்த மௌனம் சாதிப்பது
(பயந்த சுபாவமுள்ள ஒரு பொதுமகன்)

14.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு சமூகம் வீடு கட்டாமலே இருந்திருக்கிறார்கள். காலையில் சூரியன் கிழக்குப்பக்கம் உதிக்கும்போது பெரும் நிழல்தட்டியை கிழக்குத் திசைநோக்கி சாத்துவதும், மாலையில் மேற்குத் திசைநோக்கி சாத்துவதுமாக அவர்கள் தங்கள் வாழ்நாளை போக்கியிருக் கிறார்கள். வீடு கட்டுவதற்குரிய நாட்களை மிச்சம் பிடித்தால் அந்நாட்களில் இறைவனை வணங்கி நல்லமல் செய்யலாம் என்று இதற்கு காரணமும் சொல்லியிருக்கிறார்கள்.
(சமயச் சொற்பொழிவாளர்)

15.
வீடு கட்டுகின்ற தந்தைமார்கள் அதனை ஒரு பொழுதேனும் அனுபவிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. இரவு பகலாக கண்விழித்து வீட்டை கடைசியாக பூர்த்தி செய்கின்ற அன்றே தம் பெண் மக்களுக்கு கல்யாணம் வைத்திருப்பதால் அவ்வீட்டை கடைசியாகவும் முழுமையாகவும் அவர்களால் பார்க்க முடிவதில்லை. வேலையின் களைப்பில் வீட்டின் முன் விறாந்தையில் வந்தமரும் தந்தையர் தமது தோள்த் துண்டினால் நிலத்தில் புழுதி தட்டி கொஞ்சம் அமர்ந்து கொள்கின்றனர். பூ.... என்று ஆசுவாசத்தோடு பெருமூச்சு விட்டபடி எங்கும் நெடிது நோக்குகின்றனர். ஒரு தேயிலை அருந்தும் நேரம் தரிக்கின்றனர். மீண்டும் வேலை... வேலை... கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு அருகில் இருக்கும் கொட்டகையின் சாக்குக் கட்டிலில் சரிகின்றனர் தனது அடுத்த மகளுக்கு வீடு கட்டும் யோசனைகளுடன்.
(ஐந்து பேருக்கு மூத்த ஒரு பெண்பிள்ளை)

16
தமிழர்கள் வீடுகளை எளிமையாகக் கட்டுகிறார்கள். இதனால் வீட்டைத் துறப்பதையும் போராடுவதையும் சாத்தியமாக்குகிறார்கள். வீட்டிலே போட்டு காசைக் கல்லாக்குவதை விட அதை தங்கமாக உருக்கி வைக்கிறார் கள். முஸ்லிம்கள் வீடுகளை ஆடம்பரமாகக் கட்டுகிறார்கள். இதனால் போராடுவது பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள். வங்கிகளில் தமிழர்கள் தங்கத்தையும், முஸ்லிம்கள் வீடுகளையும் அடமானமாக வைக்கிறார்கள்.
(ஒரு முஸ்லிம் தேசப் போராளி)

17.
வீடு மனைவி மக்கள், வீடு வரை உறவு, அட வீட்டுக் வீட்டுக்க வாசப்படி, தெய்வத் தந்த வீடு, எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, ஆயிரம் ஜன்னல் வீடு.
(தெருப்பாடகன்)

18.
பொர, வாடி, மண்டபம், செத்த ஊடு, மண்ணூடு, ஆலஊடு, உள்ளுடு, வராந்தா, குசினி, திண்ணை, சாப்பு, ஒத்தாப்பு, புழக்கடை, மரக்கொட்டு, கெணத்தடி, கக்கூசு, கோப்பிசம், கல்லூடு, மெத்த ஊடு, அப்ஸ்ரயார், வீச்சுமரம், துலாக்கால், தயிர்ச்சட்டி, பந்தம், ஊஞ்சல், கூரை, தேன் குடம், வேதுச் சட்டிகள், பசுநெய்ச்சாடிகள், நெல், குரக்கன், சோளம், இறுங்குச் சாக்குகள், கயிற்று உறிகள், கயிற்றுப் பாயசவுகள், உரல், உலக்கை, கொச்சிக்காய் அம்மி, மருந்தரைக்கும் அம்மி, உடைகளைத் தொங்கவிடும் மான்கொம்புகள், மான் தோல் பாய்கள், தூக்கிய புதிர், கதவு, ஜன்னல், அலுமாரி, மேசை, கதிரை, மின்சாரம், சோபா செட், வைப்பர், கப்போட், டி.வி, ஏ.சி, பேன், கொயில், றைஸ் குக்கர், கிச்சன், கட்டிங் பிளேட், வோமர், பிளண்டர், ஹால், போன், டைனிங் டேபிள், கட்டில், அண்டெனா, டிஸ்க், போர்ச், மொட்டை மாடி, அட்டாச் பாத்ரூம், கொம்பியூட்டர், டேங்க், வோட்டர் சப்ளை.
(சமுதாயத்தில் புழக்கத்திலுள்ள பேச்சு வழக்குகள்)

19.
They gave up thir Avurudu, to ensure we celebrate ours. Contrubute to API VENUVEN API Housing Fund. Type API & send 8877. Rs 10/- + Tax p/m.all Procedds go to fund

sender
Mobitel@
Message centre :
+947100103
Sent:
21-Apr-2008
09:39:40
(SMS)

No comments: